தினமணி 06.01.2010
ஆரல்வாய்மொழி பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை
நாகர்கோவில், ஜன.5: ஆரல்வாய்மொழி பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட ஆரல்வாய்மொழி வடக்கூர், மீனாட்சிபுரம், வடக்கு பெருமாள்புரம், மிஷன் காம்பவுண்ட், குருசடி, கோட்டைகரை ஆகிய பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்புப் பணிகள், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டன.
சுகாதார ஆய்வாளர்கள், கிராமநல செவிலியர்கள் உள்ளிட்டோர் 6 பிரிவுகளாக வீடுவீடாகச் சென்று காய்ச்சல்நோய் கண்காணிப்பு செய்து, காய்ச்சல் தாக்கியவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். குடியிருப்புப் பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அப் பகுதிகளில் மருந்து தெளிக்கப்பட்டது. புகை மருந்தும் அடிக்கப்பட்டது.
தோவாளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். நம்பிராஜன், சுகாதார ஆய்வாளர்கள் என். ஐயாக்குட்டி, நெல்லையப்பன், ஆறுமுகம்பிள்ளை, வேலம்மாள், பிச்சையா, கிருஷ்ணன் உள்ளிட்டோர் இப் பணியில் ஈடுபட்டனர்.