தினமணி 05.01.2010
கடையநல்லூரில் பூச்சியியல் துறையினர் ஆய்வு
கடையநல்லூர், ஜன. 4: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை பூச்சியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு கொசு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.
கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த காய்ச்சலால் பலர் உயிரிழந்ததாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே கடையநல்லூரில் இறந்தவர்கள் காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாநில முதன்மை பூச்சியியல் அலுவலர் கதிரேசன், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் அப்துல்காதர், மண்டல பூச்சியியல் அலுவலர் செல்வராஜ், மாவட்ட மலேரியா அலுவலர் மோகன் உள்ளிட்டோர் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், பேட்டை, முத்துக்கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கொசு மாதிரிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனைகளில் நெருக்கடிகடையநல்லூர் பகுதியிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் இட நெருக்கடி காணப்பட்டது.