தினமலர் 05.01.2010
கடையநல்லூரில் பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு: ரத்தம் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்ப ஏற்பாடு
கடையநல்லூர்: கடையநல்லூரில் காய்ச்சல் பரவுவதையடுத்து பூச்சியியல் வல்லுநர்கள் கொசுக்களை பிடித்து பரிசோதனைக்கு அனுப்பியதுடன், காய்ச்சல் பாதித்த நோயாளிகளின் ரத்தம் பரிசோதனைக்காக ஓசூருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
கடையநல்லூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பரவலாக காணப்பட்டு வரும் மர்மக் காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் மட்டுமின்றி கை, கால் வலி, உடல் வலி, மூட்டு வலிகளால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் போதிலும் நாளுக்கு நாள் காய்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் காணப்பட்டு வரும் காய்ச்சல் எந்த வகையானது, எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பூச்சியியல் வல்லுநர்கள் குழு நேற்று கடையநல்லூரில் சர்வே மேற்கொண்டனர். மாநில பூச்சியியல் வல்லுநர் கதிரேசன், ஓசூர் பூச்சியியல் ஆய்வு மைய முதுநிலை பூச்சியியல் வல்லுநர் அப்துல்காதர், நெல்லை மண்டல பூச்சியியல் வல்லுநர் செல்வராஜ், மாவட்ட மலேரியா அலுவலர் மோகன் மற்றும் உதவியாளர்கள் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் நேற்று சர்வே பணிகளை மேற்கொண்டனர்.
கிருஷ்ணாபுரம் 5வது வார்டு, பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதித்த தெருக்களில் சர்வே பணிகளை மேற்கொண்ட வல்லுநர் குழுவினர் அப்பகுதிகளில் காணப்படக்கூடிய கொசுக்களையும் பிடித்தனர். பிடிக்கப்பட்ட கொசுக்களை சோதனை செய்வதற்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகமாக காய்ச்சல் காணப்பட்ட நோயாளிகள் 11 பேரின் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவை ஓசூருக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வல்லுநர் குழுவினருடன் கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் அப்துல் அஜீஸ், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், கைலாசம், மேற்பார்வையாளர்கள் மாரிமுத்து, அர்ச்சுனன் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர். ஓசூருக்கு அனுப்பட்டுள்ள ரத்தம் மற்றும் கொசுக்களின் பரிசோதனையை அடுத்து கடையநல்லூர் பகுதி மற்றும் பரவலாக பரவிவரும் காய்ச்சல் எந்த வகையானது என்பது தெரியவரக்கூடும் என வல்லுநர்கள் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.