தினமணி 04.01.2010
திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்த 60 வார்டுகளுக்கும் தலா ஓர் மருந்தடிக்கும் இயந்திரம்
திருச்சி, ஜன. 3: திருச்சி மாநகரில் கொசுக்களைக் கட்டுப்படுத்த 60 வார்டுகளுக்கும் தலா ஓர் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநகரக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு எஸ். சத்யா தலைமை வகித்தார். மாநகரச் செயலர் க. சுரேஷ், துணைச் செயலர்கள் ஏ.கே. திராவிடமணி, எஸ். சிவா, மாமன்ற உறுப்பினர்கள் ரெ. ஸ்ரீராமன், து. தங்கராஜ், வை. புஷ்பம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களிடம் எவ்வித வசிப்பிட ஆதாரங்களும் இல்லாவிட்டால், அந்தப் பகுதியின் மாமன்ற உறுப்பினரின் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும்.
பெரிய மிளகுப்பாறையிலுள்ள ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டடங்களைக் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். சக்ரபாணி, கட்டட சங்கச் செயலர் பி. துரைராஜ், மாதர் சம்மேளனச் செயலர் ஜி. ஈசுவரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.