தினகரன் 31.12.2009
சுகாதாரத்துறை அதிகாரிகள் மளிகை கடைகளில் ஆய்வு
அறந்தாங்கி, : அறந்தாங்கி பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் மசாலா உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் உத்தரவின்பேரில் நாகுடி வட்டார மருத்துவ அலுவலர் அருள்நம்பி தலைமையில் வட்டார உணவு ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். ரத்தினக்கோட்டை, எட்டியதளி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், விஜயபுரம், நாகுடி, கருங்குடிகாடு, பெருங்காடு மற்றும் வெட்டிவயல் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கப்படும் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லிதூள், மசாலா உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதா என ஆய்வு செய்தனர். பாக்கெட்டுகளில் உள்ள பொருட்களின் தயாரிப்பு தேதி, முகவரி, தயாரிப்பாளர்கள் முகவரிகளை சோதனை செய்தனர். தயாரிப்பு தேதி, முகவரி இல்லாத உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகவரி இல்லாத பொருட்களை விற்பனை செய்தால் உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.