தினமணி 0 7.12.2009
காய்ச்சல்: 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி, டிச. 6: திருச்சி மாநகரில் மழை காரணமாக காய்ச்சல் தொற்று இருப்பதாக அறியப்பட்ட 3 இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் 970 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சியில் அண்மையில் பெய்த மழை காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும், கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், புகை மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், சிந்தாமணி பூசாரித் தெரு சத்துணவுக் கூடம், எடமலைப்பட்டிபுதூர் நகர்நல மையம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் தலைமையில் மருத்துவர்கள் குழு பங்கேற்று, மொத்தம் 970 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டது. தொடர்ந்து வரும் புதன்கிழமை கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமிலும் இந்த மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.