தினமணி 26.11.2009
லப்பைகுடிகாட்டில் புதை சாக்கடை திட்டத்திற்கு இடம் ஆய்வு
பெரம்பலூர், நவ. 25: பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சிக்கு உள்பட்ட பென்னகோணம் பகுதியில் புதை சாக்கடை திட்டத்திற்கு இடம் தேர்வு செய்வது குறித்து செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
லப்பைகுடிகாடு பேரூராட்சிக்குள்பட்ட, பென்னகோணம் (வடக்கு) பகுதியில் புதை சாக்கடை திட்டத்திற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர், புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் எம்.என். உதயகுமார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரெங்கசாமி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் காதர்மொய்தீன், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஜே. காஜாமொய்தீன், வட்டாட்சியர்கள் மல்லப்பிள்ளை, ஜெயராமன், பேரூராட்சி செயல் அலுவலர் திலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.