Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு

Print PDF

தினமணி 25.11.2009

நகராட்சிகளில் குப்பை அகற்றும் பணி சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு

பெங்களூர், நவ. 24: கர்நாடகத்தில் நகராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியை சுய உதவிக் குழுக்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பாலச்சந்திர ஜார்க்கிஹோளி நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கர்நாடகத்தில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகளில் சேரும் குப்பைகளை முறையாக அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணியை சுய உதவிக் குழுக்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது. இதற்கான உத்தரவை அரசு ஏற்கெனவே பிறப்பித்துள்ளது.

திட்டம் செயல்படுத்தப்படுவதை ஓராண்டு காலம் அதிகாரிகள் குழு கண்காணிக்கும். தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்படும். குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை லாரி போன்ற வாகனங்களில் எடுத்துச் சென்று குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும்.

நகராட்சிகளில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த ஒப்பந்தப் பணிகளுக்கான கட்டணத்தை அந்தந்த நகராட்சிகளே நிர்ணயிக்கும். ஒரு பகுதி வருமானம் ஷ்ரீ சக்தி சுய உதவிக் குழுக்களுக்கு போய்ச் சேரும்.

நடப்பாண்டு நகராட்சிப் பகுதிகளில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்து வரி வசூலிக்க அரசு குறிக்கோள் நிர்ணயித்துள்ளது. முடிவடைந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.91 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்துக்களில் 52 பஞ்சாயத்துக்களை நகராட்சி கவுன்சில்களாக தரம் உயர்த்துவது குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் சுமார் 400 கிராமப் பஞ்சாயத்துக்களை டவுன் பஞ்சாயத்தாகமாற்றும் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:48
 

களக்காட்டில் 50 பன்றிகள் பிடிபட்டன

Print PDF

தினமணி 25.11.2009

களக்காட்டில் 50 பன்றிகள் பிடிபட்டன

களக்காடு, நவ. 24: தினமணி செய்தி எதிரொலியால் களக்காடு பேரூராட்சிப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் அண்மைக்காலமாக பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. இதனால், பஸ் நிறுத்தம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பன்றிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள்

மோகன், அப்துல்மஜீத் உள்ளிட்டோர் பன்றி, நாய்களை பிடித்துக் காட்டுப் பகுதியில் விட வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து பேரூராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு பன்றிகளை பிடித்துச் செல்ல டெண்டரும் விடப்பட்டது. இந்நிலையில், களக்காடு பகுதியில் நாய், பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதிப்படுவதாக நவம்பர் 21-ம் தேதி தினமணியில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, பன்றிகளைப் பிடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாகனத்தில் களக்காடு பகுதி முழுவதும் வலம் வந்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டன. இவைகள் நாகர்கோவில் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் கொண்டு விடப்படும் என்று கூறப்படுகிறது.

பன்றிகளை பிடித்துச் சென்றது போல தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களையும் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4-வது வார்டு உறுப்பினர் ஜெ. அப்துல்மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:45
 

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Print PDF

தினமணி 25.11.2009

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

திருநெல்வேலி, நவ. 24: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட் டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலக ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் லியாகத் அலி கூறினார்.

திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கள விளம்பர அலுவலகம் சார்பில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லியாகத் அலி பேசியது: பன்றிக் காய்ச்சலை உலகத்தைவிட்டே ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். நோய் பரவுவதை தனி ஒரு ஆளாக யாரும் நின்று தடுக்க முடியாது. அனைவரும் சேர்ந்து செயல்பட்டால்தான் தடுக்க முடியும்.

நம் நாட்டுக்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி மெக்ஸிகோ நாட்டில் இருந்து வந்தவர் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவியது. தற்போது 14,430 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனர். 553 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 2,330 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கபட்டுள் ளனர். இது வரை 11 பேர் இறந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவும். இதனால் பன்றிக் காய்ச்சல் இருப்பவர்களிடம் மிகவும் கவனத்தோடு பழக வேண்டும். பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தமிழகத்தில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை முற்றிலும் ஒழிக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் லியாகத் அலி.

கள விளம்பர அலுவலர் தி. சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ச.வை. சந்திரசேகரன், திருநெல்வேலி சுகாதாரத் துறை துணை இயக்குநர் கே.ஏ மீரா மொய்தீன் முன்னிலை வகித்தனர். வினாடி -வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்.

கள விளம்பர அலுவலர் எம். ஸ்மிதி, நேரு யுவ கேந்திர மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஆர். மதிவாணன், இந்திய செஞ்சிலுவைச் சங்கச் செயலர் டி.. பிரபாகர், பொருளாளர் எம். சொக்கலிங்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:42
 


Page 432 of 519