தினமணி 25.11.2009
தரமற்ற கேரிபேக், கப்புகள் பறிமுதல்
பழனி, நவ. 24: பழனியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி இணைந்து தரமற்ற கேரிபேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பழனி காந்தி மார்க்கெட், திண்டுக்கல் ரோடு, பஸ் நிலையம், அடிவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த 200க்கும் மேற்பட்ட பெரிய கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், பொறியாளர் அசோகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அபுதாகீர், அனீபா, நெடுமாறன், மதுரைவீரன் உள்ளிட்ட பலர் ஆய்வில் கலந்து கொண்டனர். 20 மைக்ரானுக்கு கீழே உள்ள கேரிபேக்குகள், 50 பைகள் கொண்ட 105 கிராமிற்கு குறைவான எடையில் இருந்த கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 250 கிலோ எடையிலான இவை உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது.