தினமணி 23.11.2009
தொற்று நோய் பாதிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு உத்தரவு
கோபி, நவ.22: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மழைக்காலத்தில் பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு ,வயிற்றுப்போக்கு, மலேரியா, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தகைய நோய்கள் பெரியவர்களை விட குழந்தைகளை அதிகமாக பாதிக்கும்.
நோய் பரவாமல் இருக்க பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளுதல், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து அடித்தல், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, குடிநீரில் குளோரின் மருந்தை பயன்படுத்துதல், மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்கவும், வீட்டில் உள்ள கொட்டாங்குச்சி, டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உரல்கள், பானைகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டிகளை காற்று புகாதவாறு மூடி வைக்கவும், செப்டிக் டேங்கின் மேல்பகுதியை வலையால் மூடவும் பொதுமக்களிடயே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளுமாறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.