தினமணி 18.11.2009
வடக்கனந்தலில் பன்றிகளை வெளியேற்ற நடவடிக்கை
கள்ளக்குறிச்சி, நவ. 17: தினமணியில் வெளியான செய்தியை அடுத்து, வடக்கனந்தல் பேருராட்சிப் பகுதியில் நடமாடும் பன்றிகளை வெளியேற்ற சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த வடக்கனந்தல் பேருராட்சிக்கு உட்பட்ட அக்கராபாளையம் மயானப் பாதையில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்து தினமணியில் ஆராய்ச்சிமணி பகுதியில் திங்கள்கிழமை செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ம.நல்லமுத்து அம்மாபேட்டை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பன்றி வளர்ப்பவர்களை அழைத்து பன்றிகளால் ஏற்படும் நோய்கள் குறித்து விவரித்தார். பின்னர் இன்னும் ஓரிரு நாளில் பன்றிகளை ஊருக்கு வெளியே 2 கி.மீ.க்கு அப்பால் வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியேற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். புதன், வியாழக்கிழமைகளில் அக்கராபாளையம், அக்கராபாளையம் புதுக்காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்துகிறார்.