தினமணி 18.11.2009
நோய் தடுப்பு பணியில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்
காஞ்சிபுரம், நவ. 17: நோய் தடுப்பு பணியில் நகராட்சியின் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று காஞ்சிபும் கோட்ட நலப்பணிகள் துணை இயக்குநர் சு.ராஜசேகரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில், கொள்ளை நோய் மற்றும் மழைக்கால தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் மகாலட்சுமி தேவி தலைமை வகித்தார். கூட்டத்தில் நலப்பணிகள் துணை இயக்குநர் சு.ராஜசேகரன் பங்ககேற்று பேசியது:
நகரத்தின் ஒரு தெருவில் யாருக்காவது வயிóற்றுப் போக்கோ, வாந்தியோ, காய்ச்சலோ ஏற்பட்டது தெரியவந்தால் அதனை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை கண்டுகொள்ளாத பட்சத்தில் அன்று மாலையே ஒன்று நூறாக மாறும். ஒன்றை தடுப்பது எளிது. நோய் பாதிப்பு அதிகமாகும்போது அதனை தடுக்க அனைவரும் சேர்ந்து போராடவேண்டியுள்ளது. எனவே ஒருவருக்கு நோய் தாக்கியது தெரியவந்தால், அதை நகருக்கே நோய் வந்ததாக கருதி சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.
வயிற்றுப் போக்கு, கொசு மூலம் பரவும் மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பது குறித்து படங்களுடன் சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது. போதிய மருந்து, மாத்திரைகள், பிளீச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருப்பது, நகரத்தில் நோய் பாதிப்பு ஏற்படும்போது நகராட்சியின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, நோய்களை ஒழிக்கும் பணியில் பொதுமக்களையும் ஈடுபடுத்துதல் குறித்தும் துணை இயக்குநர் விளக்கினார்.
கூட்டத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் பரணிகுமார், காஞ்சிபுரம் நகர்நல அலுவலர் பரணிதரன் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள்,சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.