Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: ஆட்சியர்

Print PDF

தினமணி 14.11.2009

நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: ஆட்சியர்

ராமநாதபுரம், நவ. 13: ராமநாதபுரம் நகரில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலக புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குத் தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:

மழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னையத் தீர்க்கும் வகையில் எம்.ஜி. மருத்துவமனை முதல் சொக்கலிங்கபுரம் வரையுள்ள பகுதியில் உள்ள வடிகால் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் புதிய பஸ் நிலையம் முதல் சிவஞானபுரம் வரையிலான பகுதியில் தண்ணீர் தேங்காமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாம்பூரணி, கிடாவெட்டிஊரணி, வல்லான்ஊரணி ஆகியவற்றை இணைத்து நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வெற்றிவேல் தியேட்டர் வழியாக தண்ணீரைக் கொண்டு சென்று கடலில் கலக்கும் வகையில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

தண்ணீர் முழுவதுமாக வெளியேறும் வகையிலான பணிகளைச் செய்ய ரூ. 2.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ரூ. 20 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் நகரில் மழைநீர் தேங்கி நிற்காத நிலை ஏற்படும். நகராட்சிப் பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்க ரூ. 21.75 கோடி மதிப்பீட்டில் பணிகளைச் செய்யவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Last Updated on Saturday, 14 November 2009 06:30
 

தேங்கும் குப்பைகளை உடனே அகற்ற மேயர் உத்தரவு

Print PDF

தினமணி 14.11.2009

தேங்கும் குப்பைகளை உடனே அகற்ற மேயர் உத்தரவு

மதுரை, நவ. 13: மதுரை நகரில் தேங்கி உள்ள குப்பைகளை உடனே அகற்றுமாறு அதிகாரிகளுக்கு மேயர் கோ. தேன்மொழி உத்தரவிட்டார். மதுரையில் மழையால் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கருத்தரங்கு கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் கோ. தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனே அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு மேயர் உத்தரவிட்டார்.

குப்பை அள்ளும் வாகனங்கள் தற்போது செல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி லாரி நிலையத்தில் இருந்து செல்வதால் குப்பைகள் அள்ளுவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக மண்டல அலுவலர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து குப்பை அள்ளும் வாகனங்கள் அந்தந்த மண்டலத்தில் இருந்து செல்ல நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

பழுதடைந்துள்ள டம்பர் பின்கள், ஆட்டோக்கள், குப்பை லாரிகளை உடனே பழுது நீக்கி, அந்தந்த மண்டலத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார். பின்னர் ஆணையர் பேசுகையில், நகர் முழுவதும் குப்பைகள் தேங்காத வகையில் உடனே அகற்ற சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பைகளை உடனே அகற்றுவதற்கு ஏதுவாகக் குப்பை லாரிகளை ஒதுக்கீடு செய்யவும், முக்கிய இடங்களில் டம்பர் பின்கள் வைக்கவும், பிளீச்சிங் பவுடர் தேவையான அளவு கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார், நகர் நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி நகர் நல அலுவலர் யசோதாமணி, நிர்வாகப் பொறியாளர்கள் மதுரம், மோகன்தாஸ், தாமோதரன் மற்றும் உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 29-வது வார்டுப் பகுதிகளில் மேயர், துணை மேயர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

போடி லைன், கருமாரியம்மன் கோயில், சாலை நகர், அருண் மருத்துவமனை சாலை, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது, குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியிருந்ததைப் பார்வையிட்ட மேயர் குப்பைகளை உடனே அகற்ற உத்தரவிட்டார். குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். தேவையான இடங்களில் டம்பர் பின்களை வைக்க ஏற்பாடு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட வார்டு சுகாதார ஆய்வாளருக்கு மேயர் உத்தரவிட்டார்.

Last Updated on Saturday, 14 November 2009 06:23
 

குப்பை கொட்ட மாற்று இடம்

Print PDF

தினமணி 14.11.2009

குப்பை கொட்ட மாற்று இடம்

புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் உருவாகும் குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு அப் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நகரப் பகுதியில் உருவாகும் குப்பைகளை மேலாண்மை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.

இக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை இனி அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், ""மாற்று இடத்தில் குப்பை கொட்டுவதற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் தேர்வு செய்யப்பட்ட மாற்று இடத்தில் குப்பை கொட்டப்படும்.

கருவடிக்குப்பம் பகுதியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமன்றி விமானப் போக்குவரத்து துறையின் சார்பிலும் எதிர்ப்பு வந்துள்ளது. அந்த நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே இப் பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்ட முடியாது. அதனால் மாற்று இடத்தில் குப்பை கொட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.

மாவட்ட ஆட்சியர் ராகேஷ்சந்திரா, உள்ளாட்சித்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் குப்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் நாரா. கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக் குழு உறுப்பினர் டி. முருகன் உள்ளிட்டோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:13
 


Page 443 of 519