Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யாவைக் கட்டுப்படுத்துங்கள்': குலாம் நபி ஆசாத்

Print PDF

தினமணி 12.11.2009

"மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யாவைக் கட்டுப்படுத்துங்கள்': குலாம் நபி ஆசாத்

சென்னை, நவ. 12: மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள், சுகாதாரத் துறைச் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி. கு. சுப்புராஜ் வெளியிட்ட அறிக்கை:

""தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் (என்ஆர்எச்எம்), நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில், இந்திய அளவில் ஒப்பிடுகையில் பல விஷயங்களில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

டாக்டர்களை ஊக்குவிக்க...: குக்கிராமங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு அதிக ஊதியம், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை தென் மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பின் தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலன் அடையும் வகையில் அமைவதை தென் மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அளவிலும் சிறிய ஊர்களிலும் உயர் சிறப்பு மருத்துவ சேவை கிடைப்பதில்லை என்பது பொது மக்களின் வருத்தமாக உள்ளது. இந்த நிலையில் முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு படிப்போரை ஆறு மாதத்துக்கு சிறிய ஊர்களில் நியமனம் செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் யோசனை கூறினார். தமிழகத்தைப் பொருத்தவரை கர்ப்பிணிகளுக்கான வளைகாப்புத் திட்டம், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கும் பிரசவித்த தாய்மார்களுக்கும் அளிக்கப்படும் இலவச மதிய உணவு ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது'' என்று சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated on Friday, 13 November 2009 09:38
 

கண்டியப்பேரி மருத்துவமனை அரசு மருத்துவமனையுடன் இணைப்பு

Print PDF

தினமணி 12.11.2009

கண்டியப்பேரி மருத்துவமனை அரசு மருத்துவமனையுடன் இணைப்பு

திருநெல்வேலி, நவ. 12: திருநெல்வேலி மாநகராட்சியின் கண்டியப்பேரி மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு விரைவில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்கும் விழா நடத்தப்பட்டு மருத்துவமனை முறைப்படி அத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என, மேயர் அ.லெ. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

திருநெல்வேலி நகரம் தென்காசி சாலையில் உழவர் சந்தை அருகேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கண்டியப்பேரி ப. ராமசாமி மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் 20 படுக்கைகள் உள்ளன.

தாமிரபரணி ஆற்றுக்கு மேற்கேயுள்ள பொதுமக்கள் இம் மருத்துவமனை மூலம் பயன்பெற்று வருகின்றனர். இம் மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைத்து அதன் கிளை மருத்துவமனையாக்க 1989 முதல் நான் முயற்சி மேற்கொண்டு வந்தேன்.

அதைத் தொடர்ந்து, மாநகராட்சியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருநெல்வேலி எம்எல்ஏ

என். மாலைராஜாவும் பேரவையில் இக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் இம் மருத்துவமனையைப் பார்வையிட்டு இணைப்புக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தார்.

இப்போது இணைப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

இம் மருத்துவமனை ஒப்படைப்பு விழா விரைவில் நடைபெறும். அதில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பார். அதன் பின்பு மருத்துவமனை அரசுக் கிளை மருத்துவமனையாக இயங்கும்.

இம் மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 400 பேர் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநோயாளிகள் பகுதியைத் திறக்கவும், கூடுதல் வசதிகளை செய்யவும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.

மருத்துவமனை மூலம் சுற்றியுள்ள 22-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவர். அரசு மருத்துவமனையில் நெருக்கடி குறையும். 5 ஏக்கர் பரப்பளவு உள்ள இம் மருத்துவமனையை விரிவுபடுத்தி மக்களுக்கு சேவையாற்ற முடியும்.

மருத்துவமனையை ஓராண்டுக்கு பராமரிக்க அரசு ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் மேயர்.

என். மாலைராஜா எம்எல்ஏ, துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் கா. பாஸ்கரன், மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், பூ. சுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ். கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:08
 

மழையால் நோய் பரவலைத் தடுக்க மாவட்டத்தில் 200 களப் பணியாளர்கள்

Print PDF

தினமணி 12.11.2009

மழையால் நோய் பரவலைத் தடுக்க மாவட்டத்தில் 200 களப் பணியாளர்கள்

சேலம், நவ. 11: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், நோய்கள் பரவாமல் தடுக்க 200 களப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள செய்தி:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, டைபாய்டு உள்ளிட்ட தண்ணீர் மூலம் பரவும் நோய்களும், டெங்கு, சிக்குன் குனியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்களும், மூச்சுக் காற்றின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சலும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பொதுமக்களுக்கு குளோரினேற்றம் செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீரையே விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அனைத்து மேல்நிலைத் தொட்டிகளையும் மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் குடிநீர் குழாய்களில் கசிவு உள்ளதா என்பதை பார்வையிட்டு அவற்றை சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளை நோய்கள் பரவும் விதம், தடுக்கும் முறைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பிளீச்சிங் பெüடர், கிருமி நாசினிகள், கொசு மருந்துகள், மருந்துப் பொருள்கள் போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கொசு மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 களப் பணியாளர்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 200 களப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குடிநீர் மூலம் பரவும் நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் குடிநீரை கொதிக்க வைத்து வடிகட்டி அருந்த வேண்டும். வீட்டருகில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதுடன், குடிநீர் கொள்கலன்களை துணி, பிளாஸ்டிக் காகிதம் கொண்டு மூடி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 12 November 2009 07:47
 


Page 446 of 519