தினமணி 12.11.2009
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன
சேலம், நவ.11: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.
சேலம் மாநகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சாலையில் போவோர் வருவோரை துரத்திக் கடிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, திருச்சி மெயின் ரோடு, குகை, சங்ககிரி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், பணியாளர்கள் நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன. இவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு ஒரு வாரத்தில் மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களிலேயே விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பணியில் துப்புரவு ஆய்வாளர்களான சரவணன், சந்திரன், ஞானசேகரன், மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணி, முருகன் மற்றும் சுமார் 20 ஊழியர்கள் ஈடுபட்டனர்.