தினமணி 11.11.2009
குப்பைகளை கொட்ட 20 ஏக்கரில் இடம் தேர்வு
இராமநாதபுரம், நவ. 10: ராமநாதபுரம் நகரில் சேரும் குப்பைகளை கொட்ட 20 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நகர்மன்றத் தலைவர் ஆர். லலிதகலா ரெத்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் நகரில் சேரும் குப்பைகள் அனைத்தையும் நகராட்சி நிர்வாகம் அல்லிக் கண்மாய் சுடுகாட்டில் கொட்டுவதால் துர்நாற்றத்துடன் தொற்று நோய் பரப்பும் இடமாகவும் அப்பகுதி உள்ளது என, தினமணியில் கடந்த 9.11.09 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜி. லலிதகலா ரெத்தினம் தெரிவித்ததாவது:
நகரில் சேரும் குப்பைகளைக் கொட்ட பட்டணம்காத்தான் பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியர் உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் து. இளங்கோ, வட்டாட்சியர் இந்திரஜித், நகராட்சிப் பொறியாளர் கருப்புச்சாமி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று இடத்தைத் தேர்வு செய்திருக்கிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் அங்கு சுமார் 4 அடி உயரத்தில் குப்பைகளை கொட்டும் மேடை அமைக்கப்படும். அங்கு செல்வதற்கென ரூ. 13 லட்சம் செலவில் தனியாக சாலை ஒன்றும் அமைக்கப்படும். பின்னர், மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என பிரித்து இயற்கை உரமாக மாற்றி, அவை ஏற்றுமதி செய்யும் வகையில் கட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இரண்டு மாதத்தில் நகரில் சேரும் குப்பைகள் அனைத்தையும் அங்கு கொட்டப்படும்.
நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரூ. 21 கோடி அரசு நிதியாகவும், மீதமுள்ள ரூ. 9 கோடி சிறிது சிறிதாக மக்களாலும் கட்டப்பட்டு வருகிறது.
நகர் மக்களின் வசதி கருதி என் சொந்த செலவில் ரூ. 13 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. தொடர் மழையில் அச்சாலைகள் அனைத்தும் ஒரே வாரத்தில் சேதமாகிவிட்டன. குடிநீர் வடிகால் வாரியம் சாலைகளை நகராட்சியிடம் ஒப்படைத்த பிறகு, மீண்டும் சாலைகளை ரூ. 21 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.