தினமணி 07.11.2009
குமரி மாவட்டத்தில் நவ.15, டிச. 13 தேதிகளில் சிறப்பு போலியோ முகாம்
நாகர்கோவில், நவ. 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்களுக்கு சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நவ. 15, டிச. 13 தேதிகளில் நடக்கிறது.
இது தொடர்பாக நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பேசியதாவது:
2010 ஜனவரி 10 மற்றும் பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
கூடுதலாக வெளிமாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்வோருக்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நவ. 15 மற்றும் டிசம்பர் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள், மீன்பிடித்தல் தொழிலுக்காக இடம்பெயர்ந்து வந்தவர்கள், தோட்டங்களில் பணிபுரிவோர் போன்ற குடும்பங்களை சேர்ந்த 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளும் இச் சிறப்பு முகாம்கள் மூலம் பயன்பெறுவர்.
இது தொடர்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டதில் 724 குடும்பங்களைச் சேர்ந்த 2797 பேரில் 343 குழந்தைகள் 5 வயதுக்கு உள்பட்டவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) எம். மதுசூதனன், இணை இயக்குநர் (நலப் பணிகள்) மோகன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) ஷாகுல் ஹமீது, நாகர்கோவில் நகர் நல அலுவலர் போஸ்கோ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.