தினமணி 5.11.2009
கோயம்பேடு மார்க்கெட்டில் குப்பை அகற்ற புதிய ஒப்பந்தம்
சென்னை, நவ. 4: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் அடுத்த 12 ஆண்டுகள் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கோயம்பேட்டில் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் காய், கனி, பூ மொத்த விற்பனை அங்காடிகள் அமைந்துள்ளன. சி.எம்.டி.ஏ. இந்த அங்காடி வளாகத்தை உருவாக்கி பராமரித்து வருகிறது.
இங்குள்ள 3,500 கடைகள் மூலம் நாளொன்றுக்கு 150 முதல் 180 டன் குப்பைகள் உருவாகின்றன. இந்த குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மேலாண்மை செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்கி என்விரோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் புதன்கிழமை சென்னையில் கையெழுத்தானது. சி.எம்.டி.ஏ. துணைத் தலைவர் சூசன் மேத்யூ முன்னிலையில் உறுப்பினர் செயலர் விக்ரம் கபூரும், ராம்கி என்விரோ நிறுவனம் சார்பில் கே. பானுஜாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அடுத்த 12 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நாளொன்றுக்கு 180 டன் குப்பைகளை சேகரித்து அதில் மக்கும் குப்பைகளை (30 டன்) மின்சாரம், உரம் தயாரிக்க அளிக்க வேண்டும். மீதியுள்ள மக்காத குப்பைகளை கொடுங்கையூரில் உள்ள குப்பை சேகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப ஹைதராபாத் நிறுவனம் ஒப்புகொண்டுள்ளது.