தினமணி 2.11.2009
கொசுக்கள் இல்லாத மாநகராட்சி
ஈரோடு, நவ. 1: பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, கொசுக்கள் இல்லாத மாநகராட்சி என்ற பெருமையை ஈரோடு பெறும் என்று மேயர் குமார் முருகேஷ் தெரிவித்தார்.
மாநகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சிகள் தின விழாவில் அவர் மேலும் பேசியது:
மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.5.5 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சி அலுவலகத்துக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் காவிரி சாலை மற்றும் பெரியார் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தனியார் வணிக வளாகங்களுக்கு இணையாக மாநகராட்சி காய்கறி சந்தையை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை என்ற இடத்திலிருந்து, ஈரோடு மாநகருக்கு குடிநீர் கொண்டு வர ரூ.133 கோடியில் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 3 மாதங்களில் தொடங்கும்.
மாநகராட்சி பகுதியில் ரூ.210 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பணிகள் நிறைவுபெற்ற பின்னர் கொசுக்கள் இல்லாத மாநகராட்சி என்ற பெருமையை ஈரோடு பெறும்.
நடப்பாண்டில் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கென பல்வேறு நிதி ஆதாரங்களிலிருந்தும் ஏறத்தாழ ரூ.380 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.