Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி அனுமதி, முத்திரையின்றி இறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 18.09.2009

மாநகராட்சி அனுமதி, முத்திரையின்றி இறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை

மதுரை, செப். 17: மாநகராட்சி அனுமதி, முத்திரையின்றி இறைச்சி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எஸ். செபாஸ்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி 30-வது வார்டு மகபூப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாடு வதைசெய்யும் இடத்தை ஆணையர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். சுகாதாரமின்றி இருந்த அந்த இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் கூறியது:

மதுரை மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் ஆடு, மாடு வதை செய்வதற்காக நெல்பேட்டை மற்றும் மகபூப்பாளையம் பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆடு, மாடு வதை செய்யப்படும் முன் பரிசோதனை செய்து, தகுதியான இறைச்சியை கால்நடை மருத்துவரின் முத்திரை பெற்ற பின்னரே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் சிலர், மாநகராட்சி முத்திரை பெறாமலும், தன்னிச்சையாக வதை செய்தும், உணவுக்கு உபயோகமில்லாத இறைச்சியை விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படக்கூடிய நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி அனுமதி இல்லாமலும் முத்திரை இல்லாமலும் விற்பனை செய்வோரின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

Last Updated on Friday, 18 September 2009 06:29
 

சுகாதாரக் கேடு: உணவு விடுதிகளுக்கு எச்சரிக்கை

Print PDF

தினமணி 18.09.2009

சுகாதாரக் கேடு: உணவு விடுதிகளுக்கு எச்சரிக்கை

புதுக்கோட்டை, செப். 17: புதுக்கோட்டை நகரில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

""புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்திவிட்டு கண்ட இடங்களில் போடக்கூடாது.

கடை உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன் கூடை வைத்து அதில் மட்டுமே கழிவுகளைச் சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் தினமும் அப்புறப்படுத்தப்படும்.

இந்நிலையில், இதை மீறி பொது சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகளை சாலைகளிலோ கழிவுநீர் கால்வாய்களிலோ போடுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிப்பதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளும்.''

Last Updated on Friday, 18 September 2009 06:23
 

பைக்காரா, பழங்காநத்தம் சுகாதார மையங்களை சீரமைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு .

Print PDF

தினமணி 17.09.2009

பைக்காரா, பழங்காநத்தம் சுகாதார மையங்களை சீரமைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு .

மதுரை, செப். 16: மதுரையில் உள்ள பைக்காரா மற்றும் பழங்காநத்தம் மாநகராட்சி சுகாதார மையங்களை சீரமைத்துப் புதுப்பிக்க ஆணையர் எஸ். செபாஸ்டின் உத்தரவிட்டார்.

மேற்கண்ட சுகாதார மையங்களை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னர், பழுதடைந்த நிலையில் இருந்த அதன் கட்டடங்களை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

மதுரை மாநகராட்சியில் 17 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் 12 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தடுப்பூசி போடுதல், குடும்பக் கட்டுப்பாடு செய்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பைக்காரா, பழங்காநத்தம் ஆகிய சுகாதார மையங்களின் பழுதடைந்த கட்டடங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்படும் என்றார் ஆணையர்.

Last Updated on Thursday, 17 September 2009 05:58
 


Page 479 of 519