தினமணி 18.09.2009
மாநகராட்சி அனுமதி, முத்திரையின்றி இறைச்சி விற்றால் கடும் நடவடிக்கை
மதுரை, செப். 17: மாநகராட்சி அனுமதி, முத்திரையின்றி இறைச்சி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எஸ். செபாஸ்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி 30-வது வார்டு மகபூப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாடு வதைசெய்யும் இடத்தை ஆணையர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். சுகாதாரமின்றி இருந்த அந்த இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் கூறியது:
மதுரை மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் ஆடு, மாடு வதை செய்வதற்காக நெல்பேட்டை மற்றும் மகபூப்பாளையம் பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆடு, மாடு வதை செய்யப்படும் முன் பரிசோதனை செய்து, தகுதியான இறைச்சியை கால்நடை மருத்துவரின் முத்திரை பெற்ற பின்னரே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் சிலர், மாநகராட்சி முத்திரை பெறாமலும், தன்னிச்சையாக வதை செய்தும், உணவுக்கு உபயோகமில்லாத இறைச்சியை விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படக்கூடிய நிலை உள்ளது.
எனவே, மாநகராட்சி அனுமதி இல்லாமலும் முத்திரை இல்லாமலும் விற்பனை செய்வோரின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.