தினமணி 15.09.2009
பாதாள சாக்கடைக்காக தோண்டிய குழிகளை தாற்காலிகமாக சீரமைக்க நகராட்சி முடிவு .
திண்டுக்கல், செப். 14: பண்டிகைக் காலங்கள் வருவதை ஒட்டி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்து, தோண்டப்பட்ட குழிகளை தாற்காலிகமாக சீரமைக்க திண்டுக்கல் நகராட்சி முடிவு செய்துள்ளது.
ரம்ஜான், நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வருவதால் நகரின் முக்கிய வீதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என வர்த்தகர் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன் நகராட்சி ஆணையரிடம் கேட்டுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன், நகராட்சி ஆணையாளர் இரா.லட்சுமி ஆகியோரிடம் வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.வி.ஆர்.ஏ. சௌந்தரராஜன் மீண்டும் வற்புறுத்தியதைத் தொடர்ந்து, மெயின் ரோட்டில் நடந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை திங்கள்கிழமை இருவரும் பார்வையிட்டனர்.
பின்னர் இப்பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை பண்டிகைக் காலம் முடியும் வரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கவும்,தோண்டப்பட்ட குழிகளை சீரமைத்து தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.