Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

துப்புரவு பணியில் 16,913 பேர் அதிகாலை 2.30 மணி வரை குப்பை அகற்றம் கண்காணிப்பு

Print PDF
தினகரன்                     15.04.2013

துப்புரவு பணியில் 16,913 பேர் அதிகாலை 2.30 மணி வரை குப்பை அகற்றம் கண்காணிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையாளர் விக்ரம் கபூர் ஆகியோர் இரவு நேரத்தில் குப்பை எடுக்கும் பணியை ஆய்வு செய்தனர். இரவு 9 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  

அப்போது, மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:

தினமும் சராசரியாக பகல் நேரத்தில் 3266 மெட்ரிக் டன்னும், இரவு நேரத்தில் 1523 மெட்ரிக் டன் குப்பையும் என நாள் ஒன்றுக்கு 4789 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்படுகிறது. இதற்காக கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளரை நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கூடுதலாக 8300 பேர் துப்புரவு பணிக்காக நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், குப்பை அகற்றும் பணியில் 9537 நிரந்தர பணியாளர், தற்காலிகமாக 570 பணியாளர், ஒப்பந்த அடிப்படையில் 6806 பேர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சென்னை மாநகராட்சியில் மொத்தம் 16,913 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவ்வாறு  அவர் கூறினார்.
 

பயன்பாட்டிற்கு வரும் முன்பே பாதாள சாக்கடை குழாயில் பழுது நீக்கும் பணி

Print PDF
தினமணி          14.04.2013

பயன்பாட்டிற்கு வரும் முன்பே பாதாள சாக்கடை குழாயில் பழுது நீக்கும் பணி


விழுப்புரத்தில், பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்களில், சிலவற்றில் இருந்த அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி வரும் 2009-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது இதில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுப்பப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய கீழ்பெரும்பாக்கம் எருமனந்தாங்கல் பகுதியிலும், காகுப்பம் பகுதியிலும் இரு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் நீர் காகுப்பம் ஏரியில் விடப்பட உள்ளது.

பணிகள் முழுமையாக முடிவடையாததால் இன்னும் வீடுகளில் இருந்து கழிவுநீர் இந்த பாதாள சாக்கடை குழாய் வழியாக அனுப்பப்படவில்லை. இந் நிலையில் இந்த பாதாளச் சாக்கடையில் உள்ள அடைப்புகள் சரி செய்வதற்காக அமைக்கப்பட பகுதிகளை திடீரென்று தொழிலாளர்கள் திறந்து சரி செய்தனர்.

நாபாளையத் தெரு, சங்கரமடம் தெரு ஆகிய இடங்களில் இப் பணிகள் நடைபெற்றன. கழிவுநீர் அனுப்பப்படுவதற்குள் என்ன அடைப்பு ஏற்பட்டது என்பது புரியாமல் அப் பகுதி பொதுமக்கள் குழப்பம் தெரிவித்தனர். இதற்குள் அடைப்பு ஏற்பட்டால், கழிவு நீர் செல்லும்போது என்ன ஆகும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து நகராட்சி பொறியாளர் பார்த்திபனிடம் கேட்டபோது பாதாள சாக்கடை இன்னும் நகராட்சியிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. நகராட்சியிடம் ஒப்படைக்கும்போது சுத்தமாக ஒப்படைக்க வேண்டும். அதில் தண்ணீர் விட்டு சோதிக்க வேண்டும். வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும்போது குழாய்களுக்குள் மணல் மற்றும் கலவைத் துகள்கள் விழுந்திருக்கும். அதனை சரி செய்திருப்பார்கள் என்றார்.
 

சித்திரைத் திருவிழா: சுகாதார வசதிகளுக்காக மாநகராட்சி சார்பில் ரூ.47.43 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி          14.04.2013

சித்திரைத் திருவிழா: சுகாதார வசதிகளுக்காக மாநகராட்சி சார்பில் ரூ.47.43 லட்சம் ஒதுக்கீடு

சித்திரைத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார வசதிகளை அளிப்பதற்காக, மதுரை மாநகராட்சி சார்பில் ரூ. 47,43,300 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

சித்திரைத் திருவிழாவையொட்டி, திருவிழா நடைபெறும் இடங்களில் 50 குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். மேலும், 24 இடங்களில் குழாய்கள் பொருத்தப்பட்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படும். இந்தத் தொட்டிகளில் லாரிகள் மூலம் குடிநீர் நிரப்பப்படும். உணவகங்கள், தேநீர் கடைகளில் உள்ள குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவிழா நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகள், முழுநேரமும் பயன்படத்தக்க வகையில் பராமரிக்கப்படும். மேலும், முக்கியப் பகுதிகளுக்கு அருகே நடமாடும் கழிப்பறைகளை நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் பகுதிகளை உள்ளடக்கிய வார்டுகளில் இப்போது உள்ள துப்புரவுப் பணியாளர்களுடன், கூடுதலாக தாற்காலிக பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்படுவர். மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் 20 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதன்படி, நகரின் வடகரையில் திருவிழா இடங்களில் 10 நாள்களுக்கு 170 பேரும், தென்கரையில் 7 நாள்களுக்கு 370 பேரும் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குவதற்கான உணவு தயாரிக்கும் இடங்கள், உணவு வழங்கப்படும் இடங்கள் ஆகியன சுகாதாரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு மாநகராட்சியால் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாநகராட்சியின் அனைத்து சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களிலும் தொற்று நோய்த் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மணி மகப்பேறு மருத்துவமனை, முத்து சாரதா ஸ்கேன் சென்டர், கே.புதூர் மகப்பேறு மருத்துவமனை, தல்லாகுளம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், ராமராயர் மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் செயல்படும்.

திருவிழா பகுதிகளில் உள்ள நல்வாழ்வு மையங்கள், மகப்பேறுமனைகள், மருந்தகங்கள் ஆகியன திருவிழா நாள்களிலும் முழுநேரம் இயங்கும்.

வைகை ஆற்றுப் படுகைகளிலும், திருவிழா நடைபெறும் இடங்களிலும் மிகுந்த ஒளிதரக்கூடிய மின்விளக்குகள் அமைக்கப்படும். தெரு விளக்குகளில் அதிக ஒளிதரக்கூடிய பல்புகள் பொருத்தப்படும். இப்பகுதிகளில் தடையற்ற வகையில் மின்விநியோகம் செய்வதற்கும், மின்துறை அமைச்சர் மற்றும் மின்வாரியத்துக்கு வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், துணைமேயர் ஆர். கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 64 of 519