சாக்கடை கால்வாயில் தேங்கிய கழிவுகள் அகற்றம்
விழுப்புரத்தில் திருச்சி சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாத வகையில் தேங்கிக்கிடந்த கழிவுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
விழுப்புரம் நகர்மன்றப்பகுதியில் உள்ள 45 வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் முறையான சாக்கடை வசதிகள் இல்லை. ஏற்கனவே சாக்கடை அமைக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், பராமரிக்கப்படாமல் சாக்கடை மண்மூடி தூர்ந்துவிட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளின் அருகிலேயே கழிவுநீர் சுகாதாரக்கேடாக தேங்கிக்கிடக்கிறது.
குறிப்பாக திருச்சி, சென்னை சாலைகளில், இருபுறங்களிலும் சாக்கடை ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரிகள் கடைகளை விரிவாக்கம் செய்துள்ளதால், செல்ல வழியின்றி கழிவுநீர் முழுவதும், ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பும், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பும் தேங்கிக்கிடக்கிறது.
இந்நிலையில், விழுப்புரம் நகர்மன்ற மைதானம் அருகே உள்ள போலீஸ் லைனில் உள்ள சாக்கடை கால்வாயிலும், திருச்சி சாலையில் புது பஸ்ஸாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சாக்கடைகளிலும் கழிவுநீர் செல்லமுடியாத வகையில் தேங்கிக்கிடந்த கழிவுகள் பொக்லைன் மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டன. இப் பணிகளை ஆணையர் ராஜேந்திரன் பார்வையிட்டார்.