Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திறந்தவெளி கழிப்பிடங்களைத் தடுக்க ஆலோசனை

Print PDF
தினமணி                   04.03.2013

திறந்தவெளி கழிப்பிடங்களைத் தடுக்க ஆலோசனை


திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 2015-க்குள் திறந்தவெளி கழிப்பிடங்களை முழுமையாகத் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 1000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் ஆணையர் வே.ப. தண்டபாணி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது:

மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்களில் இருந்தும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். பின்தங்கிய பகுதிகளில் அறியாமையால் மக்கள் திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிக்கும் நிலை இருக்கிறது.

இதைத் தடுக்க ஏற்கெனவே பெண்கள் மற்றும் ஆண்கள் குழுக்களை ஒருங்கிணைத்து சமுதாய வளர்ச்சி சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்தங்கிய பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்வரின் அறிவிப்பின்படி வரும் 2015-க்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க மகளிர் குழுக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்றார் தண்டபாணி.

கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம், நகர்நல அலுவலர் (பொ) ந. ராஜேசுவரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Monday, 04 March 2013 11:40
 

நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள கோரிக்கை

Print PDF
தினமணி                   04.03.2013

நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள கோரிக்கை


அரியலூர் நகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அரியலூர் வரி கொடுப்போர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, விஸ்தரிப்பு பகுதிகளிலும் வீடுகள் பெருகி வருகிறது. இதன்மூலம் நகராட்சிக்கு வருமானம் அதிகரித்துள்ளது. புதிதாக, நகர்ப்புற சுகாதார நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சியில் சுகாதார நிலை மோசமாக உள்ளது.

அனைத்து தெருக்களிலும் குப்பைகள் தேங்கியுள்ளது. மேலும், பெரியார் நகர் கீழ்புறம் கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. புதைசாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில்,  சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மாவட்ட மைய நூலகம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் வாசகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழு, பூச்சிகள் கலந்து வருவதை தவிர்க்க, நகராட்சி குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிமென்ட் ஆலைகளால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில், அந்தந்த துறைகள் மீது வரி கொடுப்போர் சங்கம் மூலம் வழக்கு தொடுக்கப்படும் என்றார் அவர்.
Last Updated on Monday, 04 March 2013 11:38
 

மீஞ்சூரில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு

Print PDF

 தினமணி       02.03.2013

மீஞ்சூரில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு

சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகளை மீஞ்சூர் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

மீஞ்சூர் சுற்று வட்டார மக்கள் நலக் கூட்டமைப்பினர் சார்பில் இந்த மனு வழங்கப்பட்டது.

பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள தோட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து மீஞ்சூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான இந்த குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் 30 ஆயிரம் பேர் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.

அந்த மனுவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் மீஞ்சூர் சுற்றுவட்டார மக்கள் நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் எதிர்ப்புகளை அரசுக்கு தெரியப்படுத்தி மாற்று இடம் பரிந்துரைக்கப்படும் என கூறினார்.

 


Page 89 of 519