Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பைமேடாக மாறிய மாம்பாக்கம் தெருக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

Print PDF
தின மலர்                27.02.2013

குப்பைமேடாக மாறிய மாம்பாக்கம் தெருக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்


சுங்குவார்சத்திரம்:சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள மாம்பாக்கம் கிராமத்தில், குப்பை வெளியேற்றம் அதிகரித்துள்ள நிலையில், அகற்ற முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகின்றன.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மாம்பாக்கம் கிராமம். இக்கிராமத்திற்கு சொந்தமான பெரும் பகுதி சிப்காட் வளாகமாக மாறிவிட்டது. சிப்காட் வளாகத்தில், 70க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்க வசதிக்காக, புதிய குடியிருப்புக்கள் கட்டப்பட்டன.

தொழிலாளர்கள் அதிகமாக மாம்பாக்கம் கிராமத்தில் குடியேறி வருகின்றனர். வெளிமாநில இளைஞர்கள், வாடகைக்கு வீடு எடுத்து, 10 முதல் 15 பேர் ஒன்றாக தங்குகின்றனர். இவர்கள், குப்பை, கழிவு பொருட்களை சாலையில் வீசுகின்றனர்.இதனால், சாலைகள் குப்பைமேடாக காட்சியளிக்கின்றன. கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெளிமாநில இளைஞர்கள் சாலையோரங்களிலேயே குளிக்கின்றனர். சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. ஊராட்சியில், குப்பை அகற்ற போதிய ஊழியர்கள் இல்லை.

 இதனால், கிராமத்தில் உள்ள சாலைகள் குப்பை மயமாக காட்சி அளிக்கின்றன. குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகமும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:12
 

குப்பைகள் தேக்கம்! * நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில்... * தனியார் நிறுவனம் பணிமேற்கொள்ளும் பகுதிகள் "பளிச்''

Print PDF
தின மலர்                26.02.2013

குப்பைகள் தேக்கம்! * நகராட்சி எல்லைக்குட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில்... * தனியார் நிறுவனம் பணிமேற்கொள்ளும் பகுதிகள் "பளிச்''

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அனைத்தும்; அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளன. தனியார் துப்புரவு பணி மேற்கொள்ளும் வார்டுகளில் மட்டும் தெருக்கள் பளிச்சென்று காணப்படுகிறது. இந்த பாரபட்ச நடவடிக்கைக்கு பொள்ளாச்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. 1 முதல் நான்கு வரையும், 16 முதல் 23 வரை உள்ள வார்டுகளில் கோவையிலுள்ள ஜென்னீஸ் ஹெல்த் அன்டு சேப்டி சர்வீஸ் நிறுவனம் துப்புரவு பணி மேற்கொண்டு வருகிறது.

இந்த வார்டுகளில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்கள், காலை 6.00 மணி முதல் பகல் 2.00 மணிவரை பணி மேற்கொள்கின்றனர். நான்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என்ற அடிப்படையில் தனியார் நிறுவனம் பணியமர்த்தியுள்ளதால் துப்புரவுப்பணி வேகமாகவும், திருப்திகரமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

இதே போன்று மீதமுள்ள வார்டுகளில் பணி மேற்கொள்ளப்படுகிறதா என்றால் இல்லை என்றே பொதுமக்கள் கூறுகின்றனர். எங்களது வார்டில் பணி மேற்கொள்ளப்படவில்லை. எங்கள் வார்டுக்கும் தனியார் நிறுவன துப்புரவு பணி மேற்கொள்ள நியமிக்க வேண்டும் என்று சொல்வதோடு தற்போது பணிமேற்கொள்ளும் தொழிலாளர்கள் மீது புகாரை மட்டுமே பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஏன் இந்த நிலை நிலவுகிறது? இதற்கு என்னதான் தீர்வு என்று நகராட்சி நகர்நலப்பிரிவில் கேள்வி எழுப்பியபோது அதிகாரிகளிடமிருந்து வந்த பதில்:

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளில் மட்டும் தனியார் நிறுவனம் துப்புரவு பணி மேற்கொண்டு வருகிறது. அன்றாடம் காலை 6.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை துப்புரவு பணியாளர்கள் பணி மேற்கொள்கின்றனர். இதில் மொத்தம் 78 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். நகராட்சி எங்களுக்கு 114 துப்புரவு பணியாளர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதுறை அதிகாரிகள் 78 பேரை மட்டுமே தேர்வு செய்து பணி மேற்கொள்ள அறிவுறுத்தியது. அதனால் அவர்களை மட்டும் தனியார் நிறுவனம் நியமித்துள்ளது.

மீதமுள்ள 24 வார்டுகளில் நகராட்சி நிரந்தர துப்புரவுப்பணியாளர் பணிமேற்கொள்கின்றனர். 25 குடும்பங்களுக்கு 3 துப்புரவு பணியாளர் என்ற அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நகராட்சியால் நியமிக்கப்படவேண்டும். ஆனால் பொள்ளாச்சி நகராட்சியில் 25 பேருக்கு ஒருவர் என்ற நிலை கூட இல்லை. அரை ஆள் கணக்கு தான் வருகிறது. பொள்ளாச்சியில் மட்டும் 26,800 குடும்பங்கள் வசிக்கின்றன.

அக்குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் பொருட்கள், வீசி எறியும் குப்பைகளை தூய்மைப்படுத்த 390 துப்புரவு பணியாளர்கள் தேவை. ஆனால் பொள்ளாச்சி நகராட்சி வசம் மொத்தம் 176 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இதில் பற்றாக்குறை ஏற்பட்டதால் தான் தனியார் நிறுவனம் துப்புரவு பணி மேற்கொள்ள ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதும் நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ப்பணியாளர்கள் என்று இருவரும் வெவ்வேறு வார்டுகளில் பணி மேற்கொண்டாலும் துப்புரவுப்பணிகளில் தொய்வான சூழலே நிலவி வருகிறது.

நிரந்தர துப்புரவுப்பணியாளர்கள் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும், பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் பணி மேற்கொள்கின்றனர். ஆனாலும் போதுமான பணியாளர்கள் இல்லாததால் பொள்ளாச்சி நகரில் துப்புரவுப்பணி கேள்விக்குறியாகி உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண கூடுதலாக நிரந்தர துப்புரவுப்பணியாளர்களை புதியதாக பணிஅமர்த்த வேண்டும் அல்லது ஒட்டுமொத்த துப்புரவு பணியையும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும். அப்போது நகர் தூய்மையாக இருக்கும் என்று நகர்நலப்பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான முடிவை நகராட்சி கூட்டம் கூட்டப்பட்டு, மக்கள் கருத்தை பெற்று அதன் பின் நிறைவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:23
 

கால்வாய், ஓடை ஓரங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு இலவச கொசு வலை

Print PDF
தின மணி          23.02.2013

கால்வாய், ஓடை ஓரங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு இலவச கொசு வலை

சென்னையில் கால்வாய், ஓடை, கூவம் ஆறு, அடையாறு போன்ற நீர்வழிப்பாதைகளின் ஓரங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு கொசு வலைகள் இலவசமாக வழங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், கொசுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் குடிசை வாழ் ஏழை மக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தீர்மான விவரம்: கொசுக்கள் உற்பத்தியாகும் தொட்டிகள், கிணறுகள் ஆகியவற்றில் வாரம் ஒருமுறை கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கும் பொருள்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் கொசுக்களை ஒழிக்க இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நீர்வழிப்பாதை ஓரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடிசை வாழ் மக்களுக்கும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் இலவசமாக கொசு வலை வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இலவச கொசு வலைகள் விரைவில் வழங்கப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Last Updated on Monday, 25 February 2013 11:23
 


Page 91 of 519