அகழிக் குளம் தூய்மை செய்யும் பணி தொடக்கம்
திண்டிவனம் நகரில் உள்ள 24-வது வார்டில் அகழிக் குளம் அமைந்துள்ளது. இது மிகவும் பழமைவாய்ந்த குளமாகும். ஒரு காலத்தில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் இக்குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில் அப்பகுதி மக்கள் தங்களின் கழிவுநீரை இக்குளத்தில் கலக்க செய்து தற்போது மிகவும் மாசுபடிந்த குளமாக மாறிவிட்டது. மேலும் இக்குளத்தில் தற்போது ஆகாயத் தாமரை படர்ந்து முற்றிலும் நீரின் தன்மை மாசடைந்துள்ளது.
இந்நிலையில் இக்குளத்தை தூய்மைப்படுத்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் என்.விஜயகுமார், நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்ததன்பேரில் தூய்மைப்படுத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது.
நகராட்சிப் பணியாளர்கள் மூலம் இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் குளத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் தங்களின் கழிவுகளை குளத்தில் செலுத்துவதைத் தடை செய்ய சுகாதாரப் பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் பாலசந்திரன், முரளிதாஸ், நகர அவைத் தலைவர் மணிமாறன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.