தினமணி 28.08.2012
துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை
கோவை, ஆக. 27: கோவை மாநகராட்சியின் தூய்மையைக் காக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முதன்முதலாக, முழு உடல் பரிசோதனை முகாம் சனிக்கிழமை துவங்கியது.மாநகராட்சியில் பணிபுரியும் 3 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களுக்கு, சீதாலட்சுமி நகர் நல மையத்தில் நடைபெற்ற முகாமை மேயர் செ.ம.வேலுசாமி துவக்கி வைத்தார்.
3 கட்டங்களாக நடைபெறும் முகாமில், முதல்கட்டமாக 10 மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் எடை, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வர். பின்னர், மாநகராட்சி ஆய்வகத்தில் ரத்தம், சிறுநீர், ஈ.சி.ஜி. உள்ளிட்ட அடிப்படை ஆய்வுகள் செய்யப்படும்.
இதற்காக ரூ.5 லட்சம் செலவில் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன. 3-வது கட்டமாக சிறப்பு மருத்துவப் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்புடன் நடைபெறும் இப் பரிசோதனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ மற்றும் பல், தோல் நோய், இருதய சிகிச்சைகளுக்கு சிறப்புப் பரிசோதனைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும். 25, 72 மற்றும் 82-வது வார்டு துப்புரவுப் பணியாளர்கள் சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டனர்.
ஆணையாளர் தி.க.பொன்னுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர் துரை, துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.