தினகரன் 13.08.2012
நகரில் சிறப்பு தூய்மை பணி நல்ல பலன் அளிக்கிறது
கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தூய்மை பணியை சிறப்பாக செய்வதற்கு ‘சிறப்பு தூய்மை குழு‘ அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தினமும் ஒரு வார்டு வீதம் தேர்வுசெய்து சிறப்பு தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். சாக்கடை சுத்தம் செய்தால், சாலையோர குப்பைகளை அகற்றுதல், சாலையோர சிறு சிறு ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மழைநீர் வடிகால் அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட வார்டுகளில் இப்பணி நிறைவடைந்துள்ளது. சிறப்பு தூய்மை பணி எப்படி நடக்கிறது, இத்திட்டத்தால் மக்களுக்கு உரிய பலன் கிடைக்கிறதா என்பது பற்றி ஆய்வுசெய்ய மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்கூட்டம் நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி தலைமை தாங்கி பேசியதாவது:
சிறப்பு தூய்மை பணி திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இக்குழுவின் நோக்கம் மக்கள் பயன்பெறும் வகையில் துப்புரவு பணிகளை சிறப்பாக செய்வது. இப்பணி 100 சதவீத பலன் அளிக்கிறது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தூய்மை பணி மட்டுமின்றி, அவ்வப்போது சிறு சிறு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுவதால், நாளடைவில் பெரிய ஆக்கிரமிப்புகள் உருவாகுவது தடுக்கப்படுகிறது. எனவே, சிறப்பு தூய்மை குழுவின் பணி இன்னும் விரிவுபடுத்தப்படும். மிக விரைவில் 100 வார்டுகளிலும் இப்பணி செய்து முடிக்கப்படும்.இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி பேசினார்.