தினமலர் 31.07.2012
பொது இடங்களில் ஆடு அறுப்பு பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் சுகாதாரமற்ற முறையில் பொது இடங்களில் இறைச்சிக்காக ஆடுகள் அறுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது.பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரில் பல லட்சம் ரூபாய் செலவில் ஆடு அறுவை கூடம் கட்டப்பட்டுள்ளது. இறைச்சி வியாபாரிகள் இதனை பயன்படுத்துவதில்லை. நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகள், சாக்கடைகள் அருகிலும் சுகாதாரமற்ற முறையில் பொது இடங்களிலும் இறைச்சிக்காக ஆடுகள் அறுக்கப்படுகின்றன. இறைச்சி கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. நாய்கள், காக்கைகள் கழிவுகளை எடுத்து சென்று பல்வேறு இடங்களில் விட்டுவிடுவதால் சுகாதார கேடு விளைகிறது. பேரூராட்சி அறுவை கூடத்தில் அறுக்கப்பட்டு,முத்திரையிடப்பட்ட இறைச்சியை மட்டுமே விற்க வேண்டும். சுகாதாரமற்ற, பொது இடங்களில் அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.