Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வைகையில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம்: மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி                30.07.2012

வைகையில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம்: மேயர் எச்சரிக்கை

மதுரை, ஜூலை 29:    மதுரை மாநகராட்சிப் பகுதியில் வைகை ஆறு மற்றும் கரைப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா எச்சரித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மாசில்லா மாநகர்-2012 என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 4 மண்டலங்களிலும் சனிக்கிழமைதோறும் குறிப்பிட்ட பகுதி தேர்வு செய்யப்பட்டு, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமையில், தீவிர துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய சாலைகள், தெருக்கள், கால்வாய்கள், கழிவுநீர் ஓடைகள் போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

 இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதியில் வைகை ஆறு மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியை, சனிக்கிழமை மேயர் துவக்கி வைத்தார். அப்போது, யானைக்கல் கீழ்பாலம், மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் பணி ஆகியன நடைபெற்றன.

 இப்பணியை மேயர், ஆணையர் ஆர். நந்தகோபால், உதவி ஆணையர் அ. தேவதாஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, மாமன்ற உறுப்பினர்கள் விஜயராகவன், முத்துமீனாள், கலாவதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 பின்னர், மேயர் செய்தியாளர்களிடம் கூறியது:

முதல்வர் ஆலோசனைப்படி, மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துப்புரவுப் பணி, குடிநீர் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படுகிறது. சிறப்பாக மக்கள் பணியாற்றும் மாநகராட்சிக்கு விருது வழங்கப்படும், என முதல்வர் அறிவித்துள்ளார்.

 இந்த விருதை பெறும் வகையில், மதுரை மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வைகையாற்றின் இருபுறங்களிலும் 4 மண்டலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தீவிர துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 நகராட்சிப் பகுதியில் வைகை ஆறு மற்றும் ஆற்றின் இருகரைப் பகுதிகளிலும் சுகாதாரம் பராமரிக்கப்படும்.

 மேலும், வைகை ஆற்றிலோ, கரைப் பகுதியிலோ யாரும் குப்பைகளைக் கொட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்படும். மீறி வைகை மற்றும் கரைப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்காக, சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, தினமும் கண்காணிப்பில் ஈடுபடுவர். துப்புரவுப் பணிகள் முடிவடைந்ததும், வைகை கரைப் பகுதிகள் அழகுபடுத்தப்படும் என்றார்.

 

குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுறுத்தல்

Print PDF
தினமணி               28.07.2012

குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுறுத்தல்

உதகை, ஜூலை 27: உதகை நகரில் தனியார் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறு நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக உதகை நகர்மன்ற ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், லாரிகள் மூலமாக தனியார் நிறுவனங்கள் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றன. இவ்வாறு விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டது என்பதற்கான சான்றிதழ் நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்படுவதில்லை.

 எனவே, தனியார் நிறுவனங்களின் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரைப் பயன்படுத்தும் பொதுமக்கள், குடிநீர் சுகாதாரமானதாகவும், சுத்திகரிக்கப்பட்டதாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். குடிநீர் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க நீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

கத்திரிக்காய் வாய்க்கால் தூர்வாரல் திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு

Print PDF
தினமலர்                    28.07.2012

கத்திரிக்காய் வாய்க்கால் தூர்வாரல் திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு


திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, கத்திரிக்காய் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் 52வது வார்டு பாரதிநகர் பகுதியில் உள்ள கத்திரிக்காய் வாய்க்காலில், 1.75 லட்ச ரூபாய் மதிப்பில், மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க தூர்வாரும் பணி மற்றும் காத்தான் வாய்க்காலில், 53 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரி, வாய்க்காலின் இருபுறமும் தடுப்புச்சுவர் மற்றும் தெரு இணைப்புகளில் ஆறு இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்படும் பணியை மாநகராட்சி மேயர் ஜெயா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் 57வது வார்டில், 66 லட்ச ரூபாய் மதிப்பில் தார்ச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ள கோணக்கரை சாலை, கட்டிட வசதி மேம்படுத்தப்படவேண்டிய உறையூர் தாந்தோணி மாநகராட்சி துவக்கப்பள்ளி, மழைநீர் வடிகால் வசதியுடன் சாலை மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய, 58வது வார்டு காவேரி நகர், நெசவாளர் காலனி, ஆறாவது குறுக்குத்தெரு மற்றும் காளையன் தெரு பகுதிகளில் மேயர் ஜெயா ஆய்வு செய்தார்.""மழைக்காலம் துவங்குவதுக்கு முன் மழைநீர் வடிகால்களில உள்ள அடைப்புகளை தூர்வாரி சீரமைக்க, 10 லட்ச ரூபாய் மதிப்பில் நான்கு கோட்டங்களிலும் முதற்கட்டமாக தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ""தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என்று மேயர் ஜெயா தெரிவித்தார்.ஆய்வின்போது, கமிஷனர் தண்டபாணி, கோட்டத்தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 109 of 519