தினமலர் 10.03.2011
கழிவுநீர் நச்சுத்தன்மை தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த தடை
தென்காசி : தென்காசி நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் நச்சுத்தன்மை தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மனித உயிர்களுக்கு தேசம் ஏற்படும் வகையில் பல்வேறு விபத்துக்கள் உண்டாவதை தவிர்ப்பதை கருத்தில் கொண்டு தென்காசி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதிகள், மருத்துவமனை, தங்குமிடம், திரையரங்கம், கல்வி நிறுவனங்கள், பணிமனைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவுநீர் நச்சுத்தொட்டியை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத பணிகளுக்கு நகராட்சி அனுமதி பெற்று உயிர் பாதுகாப்பு கவசம் அணிந்தும், தகுந்த தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களின் முன்னிலையில் மட்டுமே துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த வேண்டும். மேலும் தனியார் கழிவு நீர் அகற்றும் ஊர்திகளின் உரிமையாளர்கள் அனைவரும் கழிவுநீர் நச்சுத்தொட்டியை சுத்தம் செய்யும் போது நகராட்சி அனுமதி பெற்று போதுமான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். அரசு மற்றும் கோர்ட் உத்தரவை கடைபிடிக்காமல் செயல்பட்டு உயிரிழப்போ அல்லது பொருள் சேதமோ ஏற்படுமானால் அதற்கான முழுப்பொறுப்பினையும் கட்டட உரிமையாளர் மற்றும் கழிவுநீர் வாகன உரிமையாளரே சேரும். மேலும் அவர்கள் மீது சட்டரீதியான குற்றவியல் வழக்குகள் தொடரப்படும். இவர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க தென்காசி நகராட்சி மூலம் நகராட்சி துப்புரவு அலுவலர் டெல்விஸ் ராய் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் முகம்மது அப்துல்ஹக்கீம், அப்துல் ஜப்பார், சேகர், மகாராஜன் அடங்கிய குழுவினர் கண்காணிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.