Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

"இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை"

Print PDF

தினமலர்      22.12.2010

"இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை"

வால்பாறை:இறைச்சிக்கழிவுகளை திறந்த வெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில் காட்டுயானை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் பிரச்னை தொடர்பாக மாவட்ட கலெக்டர் உமாநாத் தலைமையில் பொள்ளாச்சியில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வால்பாறையில் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க எஸ்டேட் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் வைக்க தடைவிதிக்க வேண்டும். காட்டு யானைகள் விரும்பி உண்ணும் வாழைகளை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் பயிரிடக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதனையடுத்து வால்பாறை நகராட்சி செயல்அலுவலர் சுப்பிரமணி(பொறுப்பு) தலைமையில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் எஸ்டேட் பகுதிகளில் செயல்பட்டுவரும் இறைச்சிகடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின் அவர்கள் கூறுகையில், எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை தவிர்க்க குடியிருப்பு பகுதியையொட்டி இறைச்சிக்கடை நடத்தக்கூடாது. ஒதுக்குப்புறமான இடத்தில் இறைச்சிக்கடை வைப்பதுடன், கழிவுகளை குழிதேண்டி புதைக்க வேண்டும். நகராட்சி அனுமதி இல்லாமல் எஸ்டேட் பகுதிகளில் முறைகேடாக இறைச்சிக்கடை நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

 

போடி நகராட்சிப் பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி            15.12.2010

போடி நகராட்சிப் பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

 போடி, டிச. 14: போடியில் கடைகளில் விற்பனை செய்துவந்த காலாவதியான உணவு பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

போடியில் காலாவதியான பொருள்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத பொருள்கள், தயாரிப்பு நிறுவனப் பெயர் குறிப்பிடாத உணவுப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக் கூடாது என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் நகர் முழுவதும் சோதனை நடத்தி னர். அப்போது, கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

அதேபோன்று, செவ்வாய்க்கிழமை போடி நகராட்சி பஸ் நிலையப் பகுதிகளில்

ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சென்றாயன், மெர்லி வர்கீஸ், மணிமாறன், சுகாதார மேற்பார்வையாளர்கள் கருப்பணன், ராமர் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

இவ்வாறு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இது குறித்து, ஆணையர் கூறியது:

பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில், காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் கேடு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்யப்படும் காலாவதியான பொருள்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். பொருள்களை வாங்கும்போது, அதில் தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி உள்ளதா என சரிபார்த்து வாங்க வேண்டும் என்றார்.

 

"கொசுவை ஒழிப்பதில் மக்களின் பங்கு அவசியம்': மேயர் மா. சுப்பிரமணியன்

Print PDF

தினமணி           15.12.2010

"கொசுவை ஒழிப்பதில் மக்களின் பங்கு அவசியம்': மேயர் மா. சுப்பிரமணியன்

 

சென்னையில் கொசு ஒழிப்புத் தீர்மானங்கள் குறித்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு பிரமுகர் அட்டைகளை வழங்குகிறார் மேயர் மா. சுப்பிரமணியன்.

சென்னை, டிச. 14: கொசுக்களை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்களின் பங்கு மிகவும் அவசியம் என சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

எக்ஸ்னோரா அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய "கொசு ஒழிப்பு தீர்மானம்' குறித்த நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது:

மனிதர்களின் உயிரையே பறிக்கும் மிகவும் அபாயகரமான நோய்களை வேகமாக உண்டாக்குவதில் கொசுக்களுக்கே முதலிடம். கொசுக்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது நமது நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு கொசுவின் இனப்பெருக்க காலத்தில் அது ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறது. எனவே கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க முடியும்.

கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம். வீட்டின் பின்பகுதியில் தண்ணீரைத் தேங்க விடுவது, சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருத்தல், கிணறுகளை பராமரிக்காமல் விட்டுவிடுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கொசுக்களின் உற்பத்தி பல மடங்காகி விடுகிறது.

எனவே இயற்கையாக கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியாவிட்டாலும், கொசுவின் உற்பத்தியைத் தடுக்கும் விதத்தில் நாம் செயல்பட முயற்சி செய்ய வேண்டும். இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த சென்னை மாநகராட்சி, மாநகரில் பல கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன்படி, சென்னையில் உள்ள பேருந்து சாலை, உட்புறச் சாலை உள்ளிட்ட அனைத்துச் சாலைகளிலும் ஒரே நேரத்தில் கொசு ஒழிப்பு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையில் உள்ள அனைத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

236 கொசு ஒழிப்பு வாகனங்கள், 9 கைத் தெளிப்பான்கள், 20 கால் தெளிப்பான்கள், 9 கட்டுமரங்கள், 6 படகுகள் உள்ளிட்டவை இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக வெளிநாடுகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எப்படி செயல்பட்டு வருகிறது என்பதைக் கண்காணித்து அதனை இங்கே செயல்படுத்தும் பொருட்டு தண்டையார்பேட்டை மாநகராட்சி மருத்துவமனையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கொசுக்களை ஒழிப்பதில் மாநகராட்சி உள்ளிட்ட அரசுத் துறைகள் செயல்பட்டால் மட்டும் போதாது. அவர்களுடன் இணைந்து பொதுமக்களும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே கொசு ஒழிப்பு குறித்த சில நடவடிக்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சென்னையில் உள்ள சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு பிரமுகர் அட்டை வழங்கப்படும். அந்த மாணவர்கள் தங்கள் வீடுகள் மட்டுமன்றி தங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை எடுத்துக் கூறுவார்கள். இதனைப் பின்பற்றினாலே கொசு ஒழிப்பு நடவடிக்கை வெற்றிப் பெறும் என்றார் அவர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆசிஷ்குமார், நடிகர் எஸ்.வி. சேகர், எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 116 of 519