Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரியலூர் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு மருந்து

Print PDF

தினகரன்                20.11.2010

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரியலூர் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு மருந்து

அரியலூர், நவ. 20: அரியலூர் நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது. அரியலூர் நகரில் தற்போது பெரும்பாலானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து டெங்கு காய்ச்சால் பரவாமல் தடுப்பதற்காக அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் பொன்னுசாமி தலைமையில் நடந்தது.

சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். காய்ச்சல் குறித்து அரியலூர் நகரில் ஆய்வு நடத்தவும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் நகர் முழுவதும் கொசுக்களை அழிக்க உடனடியாக புகை மருந்து அடிக்க வேண்டுமென கலெக்டர் பொன்னுசாமி தெரிவித்தார்.

இதையடுத்து அரியலூர் நகரில் வீடுவீடாக சென்று மருத்துவத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். நகராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன் உத்தரவின்பேரில் நகர் முழுவதும் இயந்திரம் மூலம் கொசு மருந்தை துப்புரவு தொழிலாளர்கள் அடித்தனர். நகராட்சி தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

கொசு ஒழிப்பு முகாம்

Print PDF

தினமணி              19.11.2010

கொசு ஒழிப்பு முகாம்

சிங்கம்புணரி, நவ. 18: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி 18 வார்டுகளிலும் கொசு ஒழிப்பு தீவிர முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிங்கம்புணரி பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து நடத்திய முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ஜெயக்கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் மங்களேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாமில் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள் மற்றும் முக்கிய வீதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் வடிவேல், சுரேஷ், மோகன், சாத்தையா மற்றும் பேரூராட்சித் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் சேரலாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன் செய்திருந்தார்.

 

கார்த்திகை தீபத் திருவிழா 9 நடமாடும் கழிவறைகள் அமைக்க முடிவு

Print PDF

தினமணி                    16.11.2010

கார்த்திகை தீபத் திருவிழா 9 நடமாடும் கழிவறைகள் அமைக்க முடிவு

திருவண்ணாமலை, நவ. 15: கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக, திருவண்ணாமலையில் 9 நவீன நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கழிவறைகளை நகர்மன்றத் தலைவர் இரா. ஸ்ரீதரன் திங்கள்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இவர்களின் வசதிக்காக கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நவீன நடமாடும் கழிவறைகள் திருவண்ணாமலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணிக்காக 250 பணியாளர்களும், 600 தாற்காலிகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொசு, ஈக்கள் ஒழிப்பு பணிக்கு 20 புகை மருந்து அடிக்கும் இயந்திரங்களும், குப்பைகள் அள்ளுவதற்காக நகராட்சியின் 6 வாகனங்கள் உள்பட 11 வாகனங்களும் பயன்படுத்தப்படும். 4 மாட வீதிகளும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பழுதுபார்க்கப்பட்டு விட்டது. தற்போது, செங்கம் சாலை, திண்டிவனம் சாலை உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. சுவாமி வீதி உலா வரும் இடங்களில் கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய 6 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்படும். நகராட்சி அலுவலகத்தில் சுகாதார பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க 222344 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார். பேட்டியின்போது நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர். செல்வம், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணியன், ஆணையர் ஆர். சேகர், பொறியாளர் சந்திரன், நகர்நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 132 of 519