Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

விரைவில் டெல்லியில் அறிமுகம் கொசு மருந்து புகையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய மருந்து

Print PDF

தினகரன்                     02.11.2010

விரைவில் டெல்லியில் அறிமுகம் கொசு மருந்து புகையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய மருந்து

புதுடெல்லி, நவ. 2: கொசு மருந்து புகையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் நலனை காக்கும் வகையிலும், பாதிப்பு இல்லாத புதிய கொசு மருந்து டெல்லியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் வீடுகளில் இந்த மருந்தை கொண்டு புகை அடிக்கும் பணி நடைபெற உள்ளது.

டெங்கு, சிக்குன் குனியா என்று கொசுக்களால் ஏற்படும் பல்வேறு நோய்கள் டெல்லியில் வேகமாக பரவி வருகின்றன. இதனால் தொடர்ந்து பல கோடி ரூபாய் செலவில் கொசு மருந்துகளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காமன்வெல்த் போட்டியின்போது, டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவியதை தொடர்ந்து கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மைதானங்கள், பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு கிராமம் மற்றும் வீடுகளில் கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதன் மூலம் அப்போது பாதிப்பு மிக குறைவாக இருந்தது.

ஆனால், கொசு மருந்து புகை, கொசுக்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்று தெரியவந்துள்ளது. இதில் அதிகளவு விஷத்தன்மை உள்ளது. மாலாதியான் ஆர்கனோபோஸ்போரஸ் பாய்சன் என்ற ரசாயன மருந்துதான், கொசு மருந்து புகை அடிக்க பயன்படுத்தப்படுகிறது. டெல்லியில் ஆண்டுக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் வீடுகளில் இந்த புகை அடிக்கப்படுகிறது. இந்த புகை ஆண்டுக்கு 3 முறை மட்டுமே அடிக்க வேண்டும். அதற்கு மேல் அடிக்கவே கூடாது.

இந்த புகையால் மனிதர்களின் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இதை அதிகளவில் சுவாசித்தால் உயிரிழப்புகளும் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இந்த புகையை அடிக்கும் தவறதலாக புகை மண்டலத்தில் சிக்கி சிலர் இறந்துள்ளனர். மேலும், சாதாரணமாக கொசு மருந்து புகை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் வாழ்நாள் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் கொசு மருந்து புகை அடிக்க சிந்தடிக் பைராதிராய்டு என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது மனித உடலுக்கு கெடுதல் செய்யாததுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், கொசுக்களிடம் மட்டும் இது வீரியமாக செயல்படும். இந்தியாவில் இந்த மருந்துக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கிடையே, கொசுக்களால் பரவும் நோயை கட்டுப்படுத்தும் தேசிய திட்டம் (என்.வி.பி.டி.சி.பி.) மூலம் நகராட்சி கவுன்சில் பகுதிகளில் புதிய மருந்து மூலம் புகை அடிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி கிடைத்தால், டெல்லி முழுவதும் இந்த மருந்தை பயன்படுத்தியே கொசு மருந்து புகை அடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

 

வருமுன் காப்போம் முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

Print PDF

தினமணி                     01.11.2010

வருமுன் காப்போம் முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

கோவை,அக். 31: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் 25,072 பேர் பயனடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் மாதந்தோறும் 3வது சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி 24 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் 25,072 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 2319 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 1665 நோயாளிகளுக்கு இ.சி.ஜி மூலம் இருதயப் பரிசோதனை, 18,311 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 5033 நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் பரிசோதனை, 8640 பேருக்கு சிறுநீரில் உப்பு பரிசோதனை செய்யப்பட்டது. முகாம்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 789 மதிப்புக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்றார் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா.

 

காய்ச்சிய நீரை குடிக்கமா நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர்                 01.11.2010

காய்ச்சிய நீரை குடிக்கமா நகராட்சி வேண்டுகோள்

சென்னை : மழைக்காலத்தில் மக்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்படுவதை தடுக்க, சென்னை மாநகராட்சி வீடு வீடாக மூன்று லட்சம் குளோரின் மாத்திரைகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளது.நகரில் தொடர்ந்து மழை பெய்வதால் குடிநீரில் கழிவு நீர் கலக்க வாய்ப்பிருப்பதாலும், சில இடங்களில் குடிநீரில் குளோரின் அளவு குறைந்திருப்பதாலும் மக்கள் வாந்தி, பேதியால் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், சென்னை மாநகராட்சி வீடு வீடாக குளோரின் மாத்திரைகளை வழங்கி வருகிறது.வடசென்னை பகுதியில் தண்டையார்பேட்டை, பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு ஆகிய மண்டலங்களில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும், குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மற்ற மண்டலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.கடந்த நான்கு ஐந்து நாட்களாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை குளோரின் மாத்திரைகளை வழங்கி வருகிறது. வரும் வாரத்திற்குள் மூன்று லட்சம் மாத்திரைகளை வினியோகிக்க திட்டமிட்டிருப்பதாக, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.அதோடு, பொதுமக்கள் காய்ச்சி, வடிகட்டிய குடிநீரை குடிக்குமாறு, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


Page 140 of 519