Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொண்டலாம்பட்டி பகுதிகளில் பழைய டயர்கள் அகற்றம்

Print PDF

தினமணி 14.10.2010

கொண்டலாம்பட்டி பகுதிகளில் பழைய டயர்கள் அகற்றம்

சேலம், அக். 13: சேலம் மாநகரில் கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பஞ்சர் கடைகளில் இருந்த பழைய டயர்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில நாள்களாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்க வேண்டும் என்றும் பகல் நேரத்தில் கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோரத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், பஞ்சர் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

டயர்களில் தேங்கியிருக்கும் மழை நீரில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்தார்.

அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின் ரோடு, செüடேஸ்வரி கல்லூரி, கொண்டலாம்பட்டி பை-பாஸ், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள் சுமார் ஒரு லோடு அளவுள்ள டயர்களைப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

 

18 ஆயிரம் வீடுகளுக்கு கொசு மருந்து: நகராட்சி சுகாதாரப் படை தீவிரம்

Print PDF

தினமணி 14.10.2010

18 ஆயிரம் வீடுகளுக்கு கொசு மருந்து: நகராட்சி சுகாதாரப் படை தீவிரம்

நாமக்கல், அக். 13: நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கொசுக்களை முழுமையாக ஒழிக்கும் வகையில், 18 ஆயிரம் வீடுகளில் கொசு மருந்து மற்றும் கொசுப் புழு உற்பத்தித் தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, நாமக்கல் நகராட்சித் தலைவர் இரா.செல்வராஜ் உத்தரவின்பேரில், தீவிர கொசு ஒழிப்புப் பணி புதன்கிழமை துவங்கியது.

நகராட்சியில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 120 பேர், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 80 பேர் என 200 பேர் களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நகராட்சிப் பகுதியில் வீடுகள்தோறும் சென்று, தண்ணீர் சேமித்து வைத்துள்ள சிமென்ட் தொட்டிகள், டிரம்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது. இவை தவிர, தேவையற்ற இடங்களில் சேகரமாகும் தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பழைய டயர்கள், பயன்படுத்தாத ஆட்டுக்கல், பூந்தொட்டி, மேல்நிலைத் தொட்டிகள், தீ அணைக்கும் வாளி, தேங்காய் ஓடுகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி இருந்தால், அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

களப் பணியாளர்களுக்கு மருந்து பாட்டில்களை வழங்கி நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் கூறியது: நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் களப் பணியாளர்கள் செல்வார்கள். ஒவ்வொரு வீதியாகச் சென்று வீடுகளுக்கு மட்டுமல்லாது, பொதுக் கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரிலும் கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்க மருந்து கலக்கும் பணியில் ஈடுபடுவர்.

வீடு தேடி வரும் களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்களது வீடுகளில் உள்ள கழிவுநீர்த் தொட்டி, சாக்கடைக் குழாய், கழிவுநீர்க் குழாய் ஆகியவற்றின் முகப்பில் கொசுவலை அடித்துப் பராமரிக்க வேண்டும். எந்த நிலையிலும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அபேட் மருந்து மட்டுமின்றி, கொசு அழிப்பு புகையும் நகராட்சி வாகனங்கள் மூலம் வீதி தோறும் அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். சுகாதார அலுவலர் முகமது மூசா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

திருச்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

Print PDF

தினமணி 14.10.2010

திருச்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

திருச்சி, அக். 13: திருச்சி மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி மாநகரப் பகுதிகளில் கொசு உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் வடிகால், சாக்கடைகளில் நீர் தேங்கியுள்ள பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கொசுப் புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோட்டம் வாரியாக துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு குழு அமைத்து வார்டு வாரியாக குடியிருப்புப் பகுதியில் நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற கலன்களில் தேங்காய் ஓடுகள், டயர்கள், தகர டப்பாக்கள், பாட்டில்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், முதிர்வடைந்த கொசுக்களை அழிக்க கொசு மருந்தடிக்கும் விசைத் தெளிப்பான் ஒன்றின் மூலமும், 18 சிறிய அளவிலான கருவிகள் மூலம் புகை மருந்தடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அரியமங்கலம் கோட்டத்தில் 21, 22, 23, 24, 25 ஆகிய வார்டுகளில் இந்தப் பணி நடைபெற்று வருவதை ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தப் பகுதிகளில் சமுதாய அமைப்பாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கொசு உற்பத்தி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. காலையில் 5 வார்டுகளுக்கும், மாலையில் 5 வார்டுகளுக்கும் என நாளொன்றுக்கு 10 வார்டுகளில் புகை மருந்தடிக்கப்பட்டு 6 நாள்களில் அனைத்து வார்டுகளையும் முதல் சுற்றில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோட்டத் தலைவர் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், மண்டல பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன், உதவி ஆணையர் முத்துக்கிருஷ்ணன், உதவிச் செயற்பொறியாளர் எஸ். அமுதவள்ளி, மாமன்ற உறுப்பினர் இரா. மூக்கன் உள்ளிட்டோர் இந்தப் பணியின் போது உடனிருந்தனர்.

 


Page 147 of 519