தினமணி 08.10.2010
பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்க திட்டம்
கோவை, அக்.7: கோவை மாநகராட்சி முழுவதும் ஒரு லட்சம் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
பன்றிக்காய்ச்சல் பரவும் விதம், தடுப்பு முறைகள், நவீன சிகிச்சை முறைகள், தடுப்பு ஊசி மற்றும் மருந்து உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டது. துண்டுப் பிரசுர விநியோக துவக்க நிகழ்ச்சி, மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஆர். வெங்கடாசலம் இதனை துவக்கி வைத்தார்.
ஆணையர் அன்சுல் மிஸ்ரா, சுகாதாரக் குழுத்தலைவர் நாச்சிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர். மாலை வரை 10 ஆயிரம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 28 ஆயிரம் மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இந்த பிரசுரங்களை விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா தெரிவித்தார்.