தினமணி 06.10.2010
கழிவுநீரால் சுகாதாரக் கேடு: நகராட்சி ஆணையரிடம் புகார்
ஒசூர், அக். 5: ஒசூரில் கழிவுநீருடன் மனிதக் கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் நகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் ரெயின்போ கார்டன் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:
ஒசூர் நகராட்சிக்குள்பட்ட 3-வது வார்டில் ராஜேஸ்வரி நகர், ராஜீவ் நகர், தாயப்பத் தோட்டம், ஜேஜே நகர், வசந்த் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.
இதில் தாயப்பத் தோட்டம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் மனிதக் கழிவுகள் கலந்து விடுகிறது. இக்கால்வாயில் உருவாகும் கொசுக்கள் கடித்து, தொற்றுநோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் கூறியதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.