தினகரன் 30.09.2010
மக்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி
திருச்சி, செப். 30: மாநகர மக்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமா பேசுகையில், மத்திய பஸ் நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வழங்கப்படும் கூப்பன்களில் கட்டணம் குறிப்பிடப்படுவதில்லை. கட்டண விவர அறிவிப்பு பலகையும் இல்லை. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றார். கான்ட்ராக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் பால்சாமி கூறினார்.
காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில், குடமுருட்டி ஆற்றின் பாலத்தில் இருந்து அண்ணா சிலை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் சத்திரம் பஸ் நிலையம் தத்தளிக்க காரணமாக இருந்த குடமுருட்டி முதல் சிந்தாமணி வரையிலான காவிரி கரையில் உடைப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகள் நிறைந்த சிந்தாமணி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது என்றார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் பால்சாமி கூறினார்.
மாக்சிஸ்ட் கவுன்சிலர் தங்கராஜ் பேசுகையில், பன்றி காய்ச்சலுக்கான தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக போட வேண்டும். மாநகரில் பன்றிகளை ஒழிக்க வேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புஷ்பம் பேசுகை யில், கீழ சாராய பட்டறை தெருவில் பழுதடைந்துள்ள பொது கழிப் பிடத்திற்கு மாற்றாக புதிய கழிப்பிடம் கட்ட தர வேண் டும் என் றார்.