தினகரன் 08.09.2010
கோவில்பட்டியில் நகராட்சி குப்பை வண்டியால் தெருவில் சுகாதாரகேடு
கோவில்பட்டி, செப். 8: கோவில்பட்டி காங்கேயன் கோயில் தெருவில் நிறுத்தப்படும் நகராட்சி குப்பை வண்டியால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தெருக்களில் சேரும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இங்குள்ள காங்கேயன் கோயில் தெருவில் நகராட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வண்டியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். அவை மறுநாள் அப்புறப்படுத்தப்படுகிறது.
நகைக்கடை, பட்டறை மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள இத்தெரு சைக்கிள் தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் குறுகலானது.
இங்கு நிறுத்தப்படும் குப்பை வண்டியில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் சுகாதார கேடு ஏற்படுவதுடன், கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
சில சமயங்களில் இந்த குப்பைகளில் தீ வைக்கப்படுவதால் புகை மண்டலம் சூழ்கிறது.
எனவே ஆட்கள் நடந்து செல்லவே சிரமப்படும் இத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ள குப்பை வண்டியை மாற்று இடத்தில் நிறுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவில்பட்டி காங்கேயம் தெருவில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது