தினமணி 06.09.2010
சுகாதார சீர்கேட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
மதுராந்தகம்,செப்.5: மதுராந்தகம், ஞானகீரிஸ்வரன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி சுகாதார சீர் கேடு அடைந்து வருகிறது.
எனவே பேரூராட்சி நிர்வாகம், குப்பை சேகரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட ஞானகீரிஸ்வரன்பேட்டையில் (மேலவலம்பேட்டை) கடந்த 2002-ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. அன்று முதல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த சுகாதார நிலையத்திற்கு அருகிலேயே அப் பேரூராட்சிக்கு உட்பட்ட திடக்கழிவு குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இக் குடோனில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரிக்கப்படாமலும், திறந்த வெளியில் கொட்டப்படுவதாலும், இப் பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது.
மேலும், திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார நிலைய வளாகத்தில் சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு எளிதில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இக் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரித்துவருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக இப் பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பேரூராட்சி குப்பைகள் சேகரிக்கும் குடோனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.