Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தஞ்சை அருகே காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 30.08.2010

தஞ்சை அருகே காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

தஞ்சாவூர், ஆக 29: தஞ்சாவூர் அருகே கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சனிக்கிழமை அழித்தனர்.

தஞ்சாவூர் அடுத்த அம்மாபேட்டை வட்டாரப் பகுதிகளில் கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே.எஸ். அசோக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியன், அருள்பிரகாசம், கவுதமன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, .எஸ்.. முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகளை கைப்பற்றி கடைக்காரர்கள் முன்னிலையிலேயே அழித்தனர்.

இந்தச் சோதனை சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே. மதிவாணன் உத்தரவின்பேரில், வட்டார மருத்துவ அதிகாரி சித்ராதேவி அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.

 

மழை பாதிப்பை கண்காணிக்க தயார் நிலையில் சுகாதார குழு

Print PDF

தினமலர் 30.08.2010

மழை பாதிப்பை கண்காணிக்க தயார் நிலையில் சுகாதார குழு

திருப்பூர்: மழை வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட, திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தினமும் மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக, நொய்யல் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி நிர்வாக தரப்பில், வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாநகராட்சி பொறியாளர் திருமுருகன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு, இதற்கென நியமிக்கப்பட்டு உள்ளது. தினமும் ஒரு சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில், சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் நான்கு துப்புரவு பணியாளர்கள் மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை இரவு முழுவதும், மழை வெள்ள அபாயம் குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இரவு முழுவதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்; மழை வெள்ளம் குறித்த தகவல் வந்தால், உடனடியாக அப்பகுதிக்குச் சென்று அபாய தடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். இக்குழுவினர் செப்., 30ம் தேதி வரை இப்பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

போலியான குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன்    30.08.2010

போலியான குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

வேலூர், ஆக.30: வேலூர் கஸ்பா பகுதியில் போலி குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர் கஸ்பா மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தருவிக்கப்பட்டிருந்தன. இந்த பாட்டிலை யதேச்சையாக கவனித்த மாநகராட்சி நல அலுவலர் கோவிந்தன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் விசாரித்தபோது, குடிநீர் பாட்டில்களை அங்கிருந்த கடையில் வாங்கி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மாநகராட்சி நல அலுவலர் கோவிந்தன், உணவு ஆய்வாளர் கவுரிசுந்தர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கஸ்பா பகுதியை சேர்ந்த அஜ்மல் என்பவர் தனது வீட்டிலேயே கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து வாட்டர் பாக்கெட்டுகளையும், பாட்டில்களையும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்களையும் மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

அந்த பாட்டில்களிலும் பாக்கெட்டுகளிலும் முறையாக இருக்க வேண்டிய பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர்என்பதற்கு பதிலாக புளோரைஸ்டு வாட்டர் டிரிங்என்று இருந்ததும், போலியான ஐஎஸ்ஐ முத்திரை இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 24 குடிநீர் பாக்கெட் மூட்டைகளும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இனிமேல் இதுபோல் போலியான குடிநீர் விற்பது தெரிய வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறையான ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் கேன்களையே விற்க வேண்டும் என்றும், மாநகராட்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அஜ்மலிடம் அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர முறையான நோட்டீசும் அவரிடம் அளிக்கப்பட்டது.

Last Updated on Monday, 30 August 2010 07:58
 


Page 178 of 519