தினமணி 28.04.2010
நெல்லையில் 2 வது நாளாக சோதனை: ரூ. 30 ஆயிரம்: போலி தண்ணீர் பாக்கெட், குளிர்பானம் பறிமுதல்
திருநெல்வேலி, ஆக. 24: திருநெல்வேலியில் 2-வது நாளாக மாநகராட்சி சார்பில் கடைகளில் மேற்கொண்ட திடீர் சோதனையில், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி தண்ணீர் பாக்கெட்,குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், இணை இயக்குநர் சதாசிவன் ஆகியோர் தமிழகம் முழுவதும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தரக்குறைவாகவும் விற்கப்படும் போலி தண்ணீர் பாக்கெட்டுகளை திடீர் சோதனை மூலம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.அதன்படி தமிழகம் முழுவதும் இச் சோதனையை சுகாதாரத் துறையினர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை செய்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத் துறையினர், சந்திப்பு பஸ் நிலையம், த.மு.சாலை ஆகியப் பகுதிகளில் உள்ள குளிர்பானக் கடைகளிலும்,பெட்டிக் கடைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இச் சோதனையில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமலும் இருந்த போலி தண்ணீர் பாக்கெட், குளிர்பானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல காலாவதியான சிப்ஸ்,பிஸ்கட் போன்ற உணவு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வசந்தாநகரில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு கிட்டங்கியில் சோதனையிட்டதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி தண்ணீர் பாக்கெட்,குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் சாகுல்ஹமீது மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.மாநகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச் சோதனை இனி அடிக்கடி நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.