தினகரன் 19.08.2010
‘சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு
சென்னை, ஆக.19: இந்திய கத்தோலிக்க சுகாதார கூட்டமைப்பு மற்றும் ‘ரீச்’ தொண்டு நிறுவனங்கள் சார்பில், தேசிய அளவில் காசநோயை தடுப்பது குறித்த ‘ரவுண்டு 9’ என்ற திட்டம் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தலைமை வகித்தார். மாநில காசநோய் தடுப்பு அதிகாரி உதயா சங்கர், தி யூனியன் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குனர் நெவின் வில்சன், ‘இந்து’ பத்திரிகையின் இயக்குனர் நளினி கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி குகநாதன், நடிகை ரோகிணி, கத்தோலிக்க சுகாதார கூட்டமைப்பு தலைவர் அன்பரசி, இயக்குனர் செபஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நிருபர்களிடம் சுப்புராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயை குணமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்படி இருந்தும் ஆண்டுக்கு 5,600 பேர் இறக்கின்றனர். ஹெச்ஐவி வந்தால் பயந்தாவது சிகிச்சை எடுக்கின்றனர். ஆனால், காசநோயின் ஆபத்து தெரியாமல் சிகிச்சையை உதாசீனப்படுத்துகின்றனர்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர் வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்கும் ‘டாட்ஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவருக்கும் ரூ.6 ஆயிரம் செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தில் 11 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் பாதிப்பு குறையவில்லை. தொடர்ந்து 6மாதங்கள் மாத்திரை சாப்பிட வேண்டும். 17 சதவீதம் பேர் தொடர்ந்து சாப்பிடாமல் விட்டுவிடுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் 2 ஆண்டுகள் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு ரூ.2 லட்சம் செலவாகும்.
தமிழகத்தில் கரூர், நாமக்கல், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் காசநோய் கிருமி பாதிப்பு உள்ளது. இந்நோய் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவருக்கு ஹெச்ஐவி பாதிப்புள்ளது. இந்நோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது அரசு திட்டங்கள் மூலமும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமும் செய்யப்படுகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘ரவுண்டு 9’ திட்டம் மூலம் இதன் தாக்கம் குறையும்.
நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அடங்காத ‘சூப்பர் பக்’ கிருமி குறித்து விரிவான ஆய்வு நடத்த விஞ்ஞானிகள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆய்வு அறிக்கை வந்தவுடன் பல உண்மைகள் தெரியவரும். ஊழியர்கள் நியமனத்தில் பாதிப்பு இருப்பதால் திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. அதை போக்க 800 டாக்டர்களும், 500 ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.