Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டெங்கு பரவலை தடுக்க கொசு ஒழிப்புக்கு சிறப்பு ரயில்

Print PDF

தினகரன் 11.08.2010

டெங்கு பரவலை தடுக்க கொசு ஒழிப்புக்கு சிறப்பு ரயில்

புதுடெல்லி, ஆக. 11: டெல்லியில் கொசுக்களை ஒழிப்பதற்காக கொசு ஒழிப்பு சிறப்பு ரயில் விரைவில் விடப்பட உள்ளது. நவம்பர் வரையில் இந்த ரயில் டெல்லியில் ஓடும்.

டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருக்கும் அக்டோபர் மாதத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பல்வேறு உஷார் நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

கழிவுநீர் தேங்கியதன் மூலம் கொசுக்களை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது. கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களுடன் கூடிய வாகனங்கள், கைகளால் இயக்கும் கொசு மருந்து இயந்திரங்களை ஸி3 கோடி செலவில் மாநகராட்சி வாங்கியுள்ளது.

கொசு ஒழிப்பு முயற்சியின் அடுத்த கட்டமாக, டெல்லியில் உள்ள நீர்நிலைகளில் கொசுக்களை ஒழிப்பதற்காக வடக்கு ரயில்வேயுடன் மாநகராட்சி கைகோர்த்துள்ளது. கொசு ஒழிப்பு சிறப்பு ரயில் மூலம் நீர்நிலைகளில் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொசு ஒழிப்பு சிறப்பு ரயிலில் தாழ்வான பெட்டியில் ஒரு லாரி இருக்கும். அந்த லாரியில் கொசு மருந்து அடிக்கும் மிகப்பெரிய எந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எந்திரத்தின் மூலம், தண்டவாளத்தையொட்டியுள்ள நீர்நிலைகளில் கொசுமருந்து பீய்ச்சி அடிக்கப்படும். தண்டவாளத்தின் இருபுறங்களிலும் 50 முதல் 60 மீட்டர் வரையிலான பரப்புக்கு நீர்நிலைகளில் கொசு மருந்தை இயந்திரம் பீய்ச்சியடிக்கும்.

புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து டெல்லி ஷாதரா, ஆனந்த்விகார் முனையம் வழியாக ஹசரத் நிஜாமுதீன் வரையில் இந்த கொசு ஒழிப்பு ரயில் இயக்கப்படும். அதன்பிறகு, லஜ்பத் நகர், சப்தர்ஜங், படேல் நகர் ஆகிய ரிங் ரயில் நிலையங்கள் வழியாகவும் இந்த ரயில் இயக்கப்படும்.

இதுதவிர, புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து ஆதர்ஷ் நகர், பத்லி வழியாக நரேலா அருகில் உள்ள ரத்தானா வரையிலும் இந்த கொசு ஒழிப்பு ரயில் இயக்கப்படும். அங்கிருந்து அசோக் நகர், லாரன்ஸ் ரோடு வழியாக புதுடெல்லிக்கு ரயில் திரும்பும். இந்த ரயில் நவம்பர் மாதம் வரை 15 நாட்களுக்கு இருமுறை இயக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்

.

Last Updated on Wednesday, 11 August 2010 06:07
 

தடுப்பு நடவடிக்கைகளை மீறி பன்றிக்காய்ச்சல், டெங்கு வேகமாக பரவுகிறது

Print PDF

தினகரன் 11.08.2010

தடுப்பு நடவடிக்கைகளை மீறி பன்றிக்காய்ச்சல், டெங்கு வேகமாக பரவுகிறது

புதுடெல்லி, ஆக. 11: டெல்லியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. புதிதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் 25 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் கட்டுக்குள் இருந்த பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 172 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரையில் 9,895 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற் றுள்ளனர்.

இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பன்றிக்காய்ச்சலால் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.

இதேபோல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் 8 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய ரத்தமாதிரி பரிசோதிக்க ப் பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.

மாநகராட்சி சுகாதார அதிகாரி என்.கே.யாதவ் கூறுகையில், "இந்த சீசனில் இதுவரையில் 121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. இதேபோல் நவீன இயந்திரம் மூலம் புகையும் போடப்படுகிறது" என்றார்.

மாநகராட்சி பகுதியில் மட்டும் 77 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நகராட்சி கவுன்சில் பகுதியில் 22 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதற்கிடையே, கொசுக்கள் பெருகும் வகையில் தங்கள் பகுதிகளில் நீரை தேங்கவிட்டவர் களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி வருகிறது

 

 

 

உணவு பண்டங்களில் தரக்குறைவு;வழக்கு தொடர மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 11.08.2010

உணவு பண்டங்களில் தரக்குறைவு;வழக்கு தொடர மாநகராட்சி முடிவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப் படும் உணவு பண்டங்களின் மாதிரியை ஆய்வு செய்தனர். அவை தரக்குறைவுடனும், கலப்படம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடர, உணவுப் பொருள் கலப்பட தடுப்பு பிரிவு இணை இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறை, உணவுப்பொருள் கலப்படத் துறை ஆய்வாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உணவு பண்டங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தினர். சேகரிக் கப்பட்ட மாதிரிகளில், மூன்றில் ஒரு பங்கு உணவு பண்டங்களின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
மாநகராட்சி சுகாதாரப்பிரிவில், உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவில் கடந்த காலங்களில் போதிய ஆட்கள் இல்லை. இதனால், தொடர் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. மாநகராட்சியில் பல்வேறு பகுதி களில் தரமற்ற, கலப்படத்துடன் கூடிய உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் கலப்பட தடுப்பு பிரிவை மேம்படுத்தி, ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. நடப்பாண்டில் ஏப்., முதல் இதுவரை 77 ஆய்வு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பால், துவரம் பருப்பு, மிக்சர், குலோப் ஜாமூன், உளுந்தம் பருப்பு, சன் பிளவர் ஆயில், கோதுமை ரவை, கோதுமை, டீத்தூள், மிளகாய்த் தூள், நெய், நல்லெண்ணெய், ரஸ்க், வெண்ணை, சாக்லெட், அப்பளம், மஞ்சள் தூள், காபி பொடி, தக்காளி சாஸ், மைதா மாவு, கடலைப்பருப்பு, தேங்காய் எண்ணெய், கொத்து மல்லி, சர்க்கரை, குளிர்பானங்கள், பிஸ்கட், வடகம், தயிர் போன்ற 77 உணவு மாதிரிகள் பல்வேறு கடை களில் இருந்து சேகரிக்கப்பட்டன. இவற்றில் 25 மாதிரிகள் தரமற்றவை யாகவும், கலப்படம் செய்திருந்ததும் கண்டறியப்பட்டது. சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நகர் நல அலுவலர் ஜவஹர்லால் கூறியதாவது:தரமற்ற, கலப்பட உணவு பொருள் விற்பனையை தடுப்பது குறித்து மேயர் மற்றும் கமிஷனர் அறிவுறுத்தினர். போதிய ஆய்வாளர் கள் நியமிக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒரு உணவு பொருளுக்கு மூன்று மாதிரிகள் எடுக்கப்படும். அவை, மாதிரி தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
இரண்டு மாதிரிகள், "சீல்' உடைக்காமல் பாதுகாக்கப்படும். கடந்த ஏப்ரலுக்கு பின், 77 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றில் 25 மாதிரிகள் தரக்குறைவானவை என உறுதியாகி உள்ளது. கலப்படம் என்றால், வேறு பொருட்களை கலக்குவது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உதாரணமாக, எண்ணெய் வகைகளில் சில மூலக்கூறுகள் இந்த அளவில் இருக்க வேண்டும் என்ற அளவீடு உள்ளது. ஹைட்ரோ ஜெனிக், அயோடின் உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்படும்.இவற்றில் வரையறுக்கப்பட்ட அளவை விட, அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அது தரமற்ற உணவு பொருள். தயிரில் குறிப்பிட்ட அளவை விட, கொழுப்பு அதிகமாக இருக்க, பவுடர் சேர்த்திருப்பர்; அது, கலப்படம். அதுபோன்ற பொருட்களை விற்பது சட்டப்படி குற்றம்.அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சென்னை உணவு பொருள் கலப்பட தடுப்பு பிரிவு இணை இயக்குனருக்கு பரிந்துரைக் கப்படும். அங்கிருந்து ஒப்புதல் பெற்று, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.

வழக்கு தொடரும் முன், சம்பந்தப் பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படும். அவர்கள், இம்மாதிரியின் ஆய்வு முடிவை மறுத்தால், மற்றொரு மாதிரியை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, தரமற்ற பொருள் அல்லது கலப்பட பொருள் என்பது மீண்டும் உறுதி செய்யப்படும்.பின், அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். தற்போது 20 வழக்குகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே 60 வழக்குகள் நிலுவை யில் உள்ளன. தற்போது 25 வழக்குகள் தொடர, துறைக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க, கோவை அரசு உதவி வக்கீலிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, ஜவஹர்லால் கூறினார்.

 


Page 197 of 519