தினகரன் 10.08.2010
அண்ணா சிலை முதல் கிண்டி வரை ஒரே நேரத்தில் 9 கி.மீ துப்புரவு பணி
சென்னை, ஆக. 10: அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து கிண்டி ரயில் நிலையம் வரை ஒரே நேரத்தில் துப்புரவு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். 9.1 கி.மீ தூரம் உள்ள இந்த சாலையின் இருபக்கமும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆங்காங்கு தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துப்புரவு பணி நடைபெற்றது.
அப்போது சாலைகள் மற்றும் வணிக வளாகங்களின் முன் குவிந்து கிடந்த மணல் மற்றும் குப்பை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் ஐஸ்அவுஸ், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய 4 மண்டலங்களைச் சேர்ந்த 725 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். குப்பை சேகரிப்பதற்காக மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வண்டிகள், 35 மூன்று சக்கர வண்டிகள், 12 லாரிகள், 40 பெரிய குப்பை தொட்டிகள் பயன்படுத்தப்பட்டன. குப்பையில் இருந்த கட்டிட இடிபாடுகள், மணல் மற்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டது.
மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஆகியோர் துப்புரவு பணியை மேற்பார்வையிட்டனர்.