தினகரன் 09.08.2010
குப்பை இல்லாத குமரியை உருவாக்க பூஜ்ய கழிவு திட்டம் ஜன.14 முதல் அமல் கலெக்டர் தகவல்
நாகர்கோவில், ஆக.9: குமரி மாவட்டத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்கப்பட்டதை தொடர்ந்து குப்பையில்லாத மாவட்டமாக மாற்றும் நடவடிக் கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துவக்கி வைத்து கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பேசியதாவது:
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து பூஜ்ய கழிவு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற பல் வேறு வகையான பயிற்சிகள் சமுதாய அளவிலும், பள்ளி, கல்லூரிகள் அளவிலும் நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தனித்தனியே திட்டம் தயார் செய்யப்பட்டு அது செயல்படுத்தப்படும். 200 வீடுகளுக்கு ஒரு பயிற்றுநர் என்ற அடிப்படையில் 2500 பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 75 ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் இதன் விழிப்புணர்வு கொண்டு செல்லப்படும். வரும் ஆறு மாதங்களுக்குள் அனைத்து வகையான செயல்பாடுகள் முடிக்கப்பட்டுவிடும்.
குப்பைகள் ஒரு இடத்தில் தேங்குவதும், அதனை அப்புறப்படுத்துவதும் பிரச்னையாக உள்ளது. குப்பை களை அது உருவாகும் இடத்திலேயே பிரித்து மக்கும் பொருட் களை மறு சுழற்சிக்கு கொண்டு செல்வதும், தேவையற்ற பொருட்களை மட்டும் குப்பையாக ஒதுக்கி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்க செய்வதும் இந்த திட்டம். குப்பைகளை உரமாக்கி வீட்டு தோட்டங்கள் அமைப்பதன் மூலம் இயற்கையான காய்கறிகளை பெற முடியும். இதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு விகிதத்தையும் குறைக்க முடியும்.
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி அன்று பழைய பொருட்களை கழித்து விடுவது போன்று மறுநாள் தமிழ் புத்தாண்டான ஜனவரி 14ம் தேதியில் இருந்து பூஜ்ய கழிவு திட்டம் குமரியில் அமல்படுத்தப்படும். அதன் பின்னர் குப்பைகளை தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியன் கிரீன் சர்வீசஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் சீனிவாசன் பயிற்சி அளித்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன் உட்பட பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முதன்மை பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்றும் தொடர்ந்து நடக்கிறது.