Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி தீவிரம்

Print PDF

தினமணி             29.11.2013

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி தீவிரம்

திருவள்ளூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் பாதிக்கப்படும் வியாபாரிகள், மூலக்காரணமான பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் நிறுவனங்களை

தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இது குறித்து அனைத்துக் கூட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி வருகிறார். அவர் செல்லும் இடங்களிலும் சாலையோரக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும் வருகிறார். மேலும் திருவள்ளூர் நகராட்சியில் சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கடைகளுக்குச் சென்று அவ்வப்போது பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் வியாழக்கிழமை காலையில் சைக்கிளில் பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் சென்று சாலையோரக் கடைகளுக்கு விநியோகிக்கும் நபரிடமிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் பஜார் வீதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, 200 கிலோ வரை பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ.3 ஆயிரத்து 500 வரை அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் கூறியது: மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அவ்வப்போது ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றோம்.  அந்த அபராத தொகைக்கேற்ப, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்ட துணிப்பைகளை வியாபாரிகளிடம் வழங்குகிறோம். சிறிய பை ரூ. 10, பெரிய பை ரூ.15 எனக் கணக்கிட்டு வியாபாரிகளுக்கு வழங்குகிறோம்.

இந்த ஆண்டு மட்டும், இதுவரை 5 டன் வரை பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துள்ளோம் என்றார்.

வியாபாரிகள் கோரிக்கை: மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளையே அதிகளவில் கேட்டு வாங்குகின்றனர்.

ஒரு வியாபாரி பிளாஸ்டிக் பை விற்பனையை நிறுத்தினால் மற்றொரு வியாபாரி ரகசியமாக விற்பனை செய்கிறார்.

இதனைப் பார்க்கும் மற்ற வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யத் தொடங்கி விடுகின்றனர்.

இதற்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டுமெனில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதிகளில் ஆய்வு செய்து அங்கு பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மாவட்டத்துக்குள் பிளாஸ்டிக் பைகளை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் திருவள்ளூர் பஜாரில் பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக ஒழியும் என்றனர்.

 

"டெங்கு' பாதிப்புள்ள பகுதிகளுக்கும் இலவச கொசுவலை

Print PDF

தினமணி             29.11.2013

"டெங்கு' பாதிப்புள்ள பகுதிகளுக்கும் இலவச கொசுவலை

சென்னை மாநகராட்சியில் டெங்கு, மலேரியா அதிகம் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச கொசு வலைகள் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் நீர்வழிப்பாதைகளின் ஓரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 5 லட்சம் இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொசு வலைகள் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யவும், இரண்டாம் கட்டமாக 4,21,816 கொசு வலைகள் கொள்முதல் செய்யவும் இரண்டு முறை டெண்டர்கள் கோரப்பட்டன.

இதில் 78,184 கொசு வலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, வலைகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 4 பேருக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டன.

குடிசை மாற்று வாரிய பகுதிகள்: இந்த நிலையில் நீர் வழிப்பாதை ஓரங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் ஏழைகளுக்கும் கொசு வலைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகள், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வலைகள் வழங்கப்படும். மேலும், சென்னையில் கடந்த காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் பாதித்த பகுதிகளைக் கண்டறிந்து, அந்த பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கும் இலவச கொசு வலைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கணக்கெடுப்பு முடிந்து கொசு வலைகள் விநியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்போது வழங்கப்படும்: கொசு வலைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் முறைப்படி தொடங்கி வைத்திருந்தாலும், கொசு வலைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. கொள்முதல் செய்யப்பட்டுள்ள கொசு வலைகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இப்போது பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. கொசு வலைகளை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 அல்லது 5 நாள்களில், டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் கொசு வலைகள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படும். இந்த கொசு வலைகள் ரூ. 1.17 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கொசு வலைகள் கூடிய விரைவில் கொள்முதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தனியார் மயமாகும் 18 வார்டு துப்புரவு பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினமலர்             28.11.2013

தனியார் மயமாகும் 18 வார்டு துப்புரவு பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

திருச்சி: மாநகராட்சி பகுதியில், 18 வார்டுகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க, திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று காலை மேயர் ஜெயா தலைமையில் நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுகையில், ""தெருக்கள் தோறும் வாகனத்தில் எடுத்து சென்று கொசு மருந்து அடிக்கும் எந்திரம், ஒரு ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ளது. சிறிய எந்திரங்களால் வார்டு முழு பகுதியிலும் கொசு மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்,'' என்றார்.

கமிஷனர் தண்டபாணி பேசுகையில், ""பெரிய எந்திரம் பழுதடைந்துள்ளது. அதற்கு பதிலாக. இரண்டு புதிய பெரிய எந்திரங்கள் வாங்கப்படும். அத்தோடு சிறிய எந்திரம் மூலம் வீடுவீடாக சென்று மருந்து அடித்ததால், பெரிய இயந்திரம் தேவையில்லாமல் போய்விட்டது,'' என்றார்.

தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன் பேசுகையில், ""கொசு அடிக்கும் எந்இயந்திரத்தை காலம் தாழ்த்தாமல், நான்கு கோட்டத்திற்கு தலா ஒரு இந்திரம் என போர்க்கால அடிப்படையில் உடனடியாக வாங்க வேண்டும்,'' என்றார்.

தி.மு.க., கவுன்சிலர் கவிதா பேசுகையில்,"" எனது வார்டில் சேதமடைந்துள்ள தேவராய நகர், சக்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட சாலைகளை புதுப்பித்து வழங்கும்படி, இரண்டாண்டாக கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் இந்த பணிகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்,'' என்று கூறிவிட்டு, அவர் உடனடியாக கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

திருச்சி மாநகரில் உள்ள, 7, 8, 9, 28, 29, 61, 62, 64, 35 முதல், 38 வரை, 39, 63, 65, 40, 41, 45 ஆகிய, 18 வார்டுகள், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்திமார்க்கெட் ஆகிய பகுதிகளின் துப்புரவு பணிகளை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்துக்கு, காங்கி., கவுன்சிலர் ஹேமா, அ.தி.மு.க., கவுன்சிலர் சுதாகர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கமிஷனர் தண்டபாணி பேசுகையில், ""துப்புரவு பணியாளர் பற்றாக்குறை காரணமாக தனியார் மயத்தை தவிர்க்க முடியவில்லை. தனியார் மயம் என்றாலும், மாநகராட்சி நிர்வாக அமைப்பின் பணி, அந்த பகுதிகளில் தொடர்ந்து நடக்கும். அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தான் தீர்மானம் ஒப்புதலுக்கு வந்துள்ளது,'' என்றார். இதையடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் மற்றும் மேலப்புதூர் ஆகிய இடங்களில் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க தேவையான பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 


Page 22 of 519