தினகரன் 30.06.2010
மாநகராட்சி திட்டம் கோவை பூங்காக்களில் மொபைல் டாய்லெட்
கோவை, ஜூன் 30: நடமாடும் கழிவறை வாகனங்கள் (மொபைல் டாய்லெட்), குடிநீர் தொட்டிகளை பஸ் ஸ்டாண்ட், பூங்காக்களில் வைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக ரூ.3.46 கோடியில் 60 நடமாடும் கழிவறை வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த கழிவறை வாகனங்கள் மாநாடு பந்தல் வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் வைக்கப்பட்டது.
இதேபோல், மாநகராட்சி சார்பில் 60 பி.வி.சி குடிநீர் தொட்டி (5 ஆயிரம் லிட்டர் நீர்தேக்க திறன்) வாங்கப்பட்டது. 400க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் பெறப்பட்டது. வாகனங்கள், குடிநீர் தொட்டி, குப்பை தொட்டி போன்றவை மாநாடு பந்தல் வளாகம், அவிநாசி ரோடு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டது. கண்காட்சி முடியும் வரையில் மாநாடு பந்தல் வளாகத்தில் நடமாடும் கழிவறை வாகனங்கள், குடிநீர் தொட்டி, குப்பை தொட்டி வைக்கப்படும்.
மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது: நடமாடும் கழிவறை வாகனங்களை கோவை வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட முக்கிய பூங்கா மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவறை வாகனங்கள் வைக்கப்படும் இடத்தில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவேண்டியுள்ளது. இதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்படும். இதேபோல், குடிநீர் தொட்டிகளையும் மக்கள் பயன்பாடு உள்ள இடங்களில் வைக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.