Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருவாரூரில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 04.06.2010

திருவாரூரில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

திருவாரூர், ஜூன் 3: திருவாரூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் நகரில் பள்ளிகள் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழ்நாடு புகைபிடித்தல் சட்டத்தின்படி, பள்ளிகளுக்கு அருகே 100 மீட்டர் வரை புகையிலை தயாரிப்புப் பொருள்களான சிகரெட், பீடி, சுருட்டு, பான்பராக் மற்றும் வாசனை புகையிலை போன்ற பொருள்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதில்லை என்ற வாசகம் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அலுவலகங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நகராட்சி ஆணையர் க. சரவணன் தலைமையில் சுகாதார அலுவலர் ராஜா, ஆய்வாளர்கள் க. மணாழகன், என். வெங்கடாசலம், வி. பழனிசாமி, ஆர். பாலமுருகன், வி. அருள்தாஸ் மற்றும் அலுவலர்கள் திருவாரூர் நகரில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே 100 மீட்டருக்குள் உள்ள கடைகளில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக்கிடங்கில் குழிதோண்டி புதைக்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் புகைபிடித்த 20 பேரிடம் தலா ரூ.100 வீதம் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் இறக்கின்றனர். இது அடுத்த 20 ஆண்டுகளில் பன்மடங்காக அதிகரிக்கக் கூடும். புகைப்பிடிப்பவர்களைக் காட்டிலும் அருகில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஆணையர் க. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

ஈ, கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி துவக்கம்!

Print PDF

தினமணி   04.06.2010

, கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி துவக்கம்!

கோவை, ஜூன் 3: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார ஊரகப் பகுதிகளில் ஈ, கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணி ஓரிரு நாள்களில் துவங்குகிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்க நாளின்போது சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து திட்டம் தயாரித்து செயலாற்றி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.செந்தில்குமார் கூறியது:

கொசு ஒழிப்புப் பணி: செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒருங்கிணைந்து கொசுக்களை கட்டுப்படுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப் பகுதிகள் 4 மண்டலங்களாகப்

பிரிகிகப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் 225 ஊழியர்களும், பொது சுகாதாரத் துறையில் இருந்து 75 பேரும் இப் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொசுக்களை அதன் லார்வா நிலையிலேயே அழிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூச்சியியல் நிபுணர்கள் 6 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் இப் பணியைக் கண்காணித்து வருகின்றனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் கொசுக்கள் உற்பத்தியாகும் அடர்த்தி விகிதம் கணக்கிடப்பட்டு, கொசுப் புழுக்களை அழிக்கும் பணி நடைபெறுகிறது.

ஈக்களைக் கட்டுப்படுத்த ஸ்பிரே: ஈக்களைக் கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணி ஓரிரு நாள்களில் துவங்குகிறது. செம்மொழி மாநாட்டுக்காக 25 ஸ்பிரேயர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஈ, கொசுக்களை அழிக்கும் மருந்துகள் பயன்படுத்தப்படும். ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சீதோஷண நிலையில் ஈ, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. அதேபோல அதிகம்பேர் கூடும் இடங்கள், உணவு வழங்கும் பகுதிகளில் ஈக்கள் அதிகம் உற்பத்தியாகும். இப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான குடிநீர் விநியோகம்: கோவை மாநகரப் பகுதியைப் பொருத்தவரை சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையங்களிலேயே குளோரினேற்றம் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், ஊர்வலப் பாதை ஆகிய இடங்களில் தாற்காலிகத் தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த தொட்டிகளில் அவ்வப்போது குளோரின் அளவு சோதனையிடப்பட்டு தேவைப்படும்பட்சத்தில் குளோரின் கலக்கப்படும்.

மருத்துவக் குழுக்கள்: மாநாட்டையொட்டி தாற்காலிக மருத்துவமனைகளைத் தவிர 9 மருத்துவக் குழுக்கள் அûமைக்கப்படுகின்றன. ஒரு மருத்துவர், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுடன் மாநாட்டையொட்டி அமைக்கப்படும் தாற்காலிக பஸ் நிலையங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் இம் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்படும் என்றார்.

 

குடிநீரை காய்ச்சிப் பருக நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமணி 04.06.2010

குடிநீரை காய்ச்சிப் பருக நகராட்சி வேண்டுகோள்

திருவள்ளூர், ஜூன் 3: நகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சி பருக வேண்டும் என்று திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக 13 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதன் மூலம் நகராட்சியின் 27 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

நகராட்சியின் குடிநீர் உப விதிகளின் படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குடிநீர் பகிர்மான முறையில் 0.20 பிபிஎம் முதல் 0.50 பிபிஎம் வரை குளோரினேஷன் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தொற்றுநோய் மற்றும் நீரினால் பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


Page 230 of 519