Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கார்பைட்' கல் மாம்பழம் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர் 03.06.2010

கார்பைட்' கல் மாம்பழம் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி

நாமக்கல்: "கார்பைட்' கல் மூலம் பழுக்க வைத்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ மாம்பழங்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

மாம்பழ சீஸன் துவங்கி உள்ளதால், பல்வேறு பகுதியில் விளைந்த மாங்காய், விற்பனைக்காக மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. மாங்காயை மொத்த விலைக்கு டன் கணக்கில் வாங்கும் வியாபாரிகள், அதை குடோன்களில் வைத்து பழுக்க வைக்கின்றனர். பழுக்க வைத்த மாம்பழங்கள் ரகத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கப்படுகிறது. வியாபாரிகள் சில ஆண்டுகளாக மாங்காய்கள் செயற்கையான முறையில் பழுக்க வைத்து, விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குடோனில் குவித்து வைக்கப்படும் மாங்காய்களுக்குள், கார்பைட் கல்லை சிறு சிறு பொட்டலங்களாக பேப்பரில் கட்டி வைக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் வெப்பத்தால், காய்கள் ஒரு சில நாட்களில் பழுத்து விற்பனைக்கு தயாராகிறது. அவற்றை உடனுக்குடன் விற்பனை செய்து கல்லா கட்டிவிடுகின்றனர் வியாபாரிகள். அந்தப்பழங்கள் இயற்கையான முறையில் பழுத்த பழங்களைப் போல் அல்லாமல், சுவை குறைந்திருக்கும். மேலும், அவற்றை சாப்பிடுவதன் மூலம் வயிற்று போக்கு போன்ற உபாதைகளும் ஏற்படும். நாமக்கல் பகுதியில் "கார்பைட்' கல் பயன்படுத்தி மாங்காய் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் வந்தது.

அதை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) முகமது மூசா தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் உதயகுமார், காசிநாதன் மற்றும் அலுவலர்கள் நாமக்கல் கோட்டைசாலை தினசரி மார்க்கெட் அருகில் உள்ள குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, "கார்பைட்' கல்லை பயன்படுத்தி பழுக்க வைத்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ மாம்பழங்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனர். இது குறித்து கமிஷனர் (பொறுப்பு) முகமது மூசா கூறியதாவது: "கார்பைட்' கல் வைத்து செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப் போக்கு முதலில் ஏற்படும். அப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். வியாபாரிகள் லாப நோக்கோடு இத்தகைய குறுக்கு வழியை பின்பற்றுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை வியாபாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

கமலீஸ்வரன் தெருவில் கழிவுநீர் வெளியேற்றம்

Print PDF

தினகரன் 02.06.2010

கமலீஸ்வரன் தெருவில் கழிவுநீர் வெளியேற்றம்

அண்ணாமலைநகர், ஜூன் 2: சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள நகராட்சி குடிநீர் பைப்பை சுற்றி கழிவுநீர் குட்டை போல தேங்கி நின்றது. இது சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகைப்படத்துடன் தினகரனில் நேற்று செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மாரியப்பன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜாராம், சுகுமாரன் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று அப்பகுதிக்கு சென்று சாக்கடை அடைப்பை சரி செய்து குட்டை போல நின்ற கழிவு நீரை வெளியேற்றி நோய் பரவாமல் இருக்க பிளீச்சிங் பவுடரை தெளித்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மக்கள் பாராட்டினர்.

 

மாநகராட்சி நடவடிக்கை கொசு உற்பத்தியை தடுக்க 3,500 ஊழியர்கள் நியமனம்

Print PDF

தினகரன் 02.06.2010

மாநகராட்சி நடவடிக்கை கொசு உற்பத்தியை தடுக்க 3,500 ஊழியர்கள் நியமனம்

புதுடெல்லி, ஜூன்2: கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த 3,500 ஊழியர்களை நியமிக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

டெல்லி மாநகராட்சி நிலைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்அக்டோபர் மாதம் நடக்க உள்ளன. கொசுக்களால் ஏற்படும் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க இப்போதே தயாராக வேண்டும். எனவே கொசு உற்பத்தியை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வீடுகளில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க புதிதாக 3,500 ஊழியர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அவர்களுக்கு மாதம் தலா ரூ.4,100 ஒட்டு மொத்த சம்பளம் வழங்கப்படும்.

இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.17.22 கோடி கூடுதல் செலவாகும். முதல் 7 மாதம் மாநகராட்சியின் சுகாதார துறையின் கீழ் சம்பளம் வழங்கப்படும். அடுத்த 5 மாதங்களுக்கு மாநகராட்சி நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும்.

அவர்கள் வீடு வீடாக சென்று கொசு தடுப்பு மருந்து தெளிப்பார்கள். வீடு வீடாக இவர்கள் செல்வதால் இவர்களை வீட்டு வரி வசூலிக்கவும் பயன்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சியின் சொத்து வரி வசூலை அதிகரிக்க முடியும்.

கடந்த ஆண்டு(2009&10) சொத்து வரியாக ரூ.1400 கோடி வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 1,157 கோடிதான் வசூலிக்க முடிந்தது.

நிர்ணயிக்கப்பட்டதை விட ரூ.250 கோடி குறைவாக இருந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ1,157 கோடி வசூல் ஆனது. டெல்லியில் 22 லட்சம் பேர் சொத்து வரி செலுத்த வேண்டும்.

ஆனால் 9.73 லட்சம் பேர்தான் சொத்து வரி செலுத்தியுள்ளனர். அதுவும் வீடு வீடாக சென்று வசூலித்ததால் இந்த அளவு மாநகராட்சிக்கு சொத்து வரி கிடைத்துள்ளது.எனவே புதிதாக நியமிக்கப்பட இருக்கும் கொசு தடுப்பு ஊழியர்கள் வீட்டு வரி வசூலிக்கும் பணியிலும் ஈடுவடுவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

 


Page 234 of 519